வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: 21வது ஆண்டு பார்லி தாக்குதல் நினைவு தினத்தை முன்னிட்டு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, காங்., தலைவர் கார்கே உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டு நினைவு கூர்ந்து உள்ளனர்.

கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி பார்லிமென்டுக்குள் புகுந்த பயங்கரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 12 பேர் பலியானார்கள். பலர் காயமடைந்தனர்.
இந்தத் தாக்குதலுக்குப்பின் இந்தியா, பாகிஸ்தான் உறவு முன்பு இருந்ததைவிட மேலும் மோசமானது. இந்தத் தாக்குதலில் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்த வீரர்களுக்கு இன்று(டிச.,13) மத்திய அரசு சார்பில் மரியாதை செலுத்தப்படுகிறது. இந்தாண்டு 21வது ஆண்டு தாக்குதல் தினம்.
இந்நிலையில் இது குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ள அறிக்கை: 2001ம் ஆண்டு இந்த நாளில் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக, பார்லி.,யை பாதுகாத்து உயிர் தியாகம் செய்த வீரமிக்க தியாகிகளுக்கு, தேசம் மரியாதை செலுத்துகிறது. அவர்களின் துணிச்சலுக்கும் உயர்ந்த தியாகத்திற்கும் நாம் எப்போதும் நன்றியுள்ளவர்களாக இருப்போம் என ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.

காங்., தலைவர் கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2001ம் ஆண்டு இதே நாளில், பார்லிமென்ட் தாக்கப்பட்டபோது, பயங்கரவாதிகளை எதிர்கொண்டு தங்கள் உச்சபட்ச தியாகத்தை ஆற்றிய துணிச்சலான வீரர்களுக்கு நமது வணக்கங்கள். எங்களின் பிரார்த்தனைகள் அவர்களின் குடும்பத்தினருடன் எப்போதும் இருக்கும்.
அவர்களின் துணிச்சலுக்கு தேசம் கடமைப்பட்டுள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் ஒன்றுபட்டு நிற்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement