தென்பெண்ணையாறு நீர் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் 3 மாதங்களில் தீர்ப்பாயம் அமைக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு..!

டெல்லி: தமிழ்நாடு, கர்நாடகா இடையேயான தென்பெண்ணையாறு நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் 3 மாதங்களில் தீர்ப்பாயம் அமைக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் பாயும் காவிரி ஆற்றின் கிளை நதியாக தென்பெண்ணையாறு உள்ளது. இதன் கிளை நதியாக உள்ள மார்கண்டேய நதியின் குறுக்கே யர்கோல் என்ற இடத்தில் கர்நாடக அரசு புதியதாக தடுப்பணை கட்ட முயன்று வருகிறது.

இதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அணை கட்ட அனுமதி வழங்கியது. இதனால், தென்பெண்ணையாறு விவகாரம்  தொட்பாக நடுவர் மன்றம் அமைக்கும்படி ஒன்றிய அரசிடம் தமிழக அரசு கோரியது. ஆனால், இந்த கோரிக்கையை ஏற்க ஒன்றிய அரசு காலதாமதம் செய்ததால், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய வழக்கு தொடர்ந்தது. அதில், ‘தென்பெண்ணையாற்றில் தடுப்பணை கட்டும் பிரச்னையை தீர்க்க, நடுவர் மன்றத்தை அமைக்க உத்தரவிட வேண்டும். அணை கட்டுவதற்கும் தடை விதிக்க வேண்டும்,’ என கோரப்பட்டது.

கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தென்பெண்ணையாறு நீர் பங்கீடு பிரச்னையை தீர்க்க 4 வாரத்தில் நடுவர் மன்றத்தை அமைக்கிறோம். அது குறித்த அறிவிப்பாணையும் விரைவில் வெளியிடுகிறோம் என்றும் ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது தென்பெண்ணையாறு நீர் பங்கீடு தொடர்பாக முடிவுக்கு ஒப்புதல் பெரும் வகையில் 4 அமைச்சகங்களுக்கும் அமைச்சக குறிப்பு சுற்றறிக்கையாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த தீர்ப்பாயம் அமைப்பது தொடர்பாக இறுதி முடிவு எடுக்க 6 மாதம் கால அவகாசம் வேண்டும் என ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார். ஆனால் 6 மாதம் அளிக்க முடியாது. 3 மாதங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் என உத்தரவிட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை மார்ச் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.