பில்கிஸ் பானு வழக்கு: புதிய அமர்வை விரைவில் அமைக்க வேண்டும் – மீண்டும் மீண்டும் குறிப்பிட வேண்டாம் சுப்ரீம் கோர்ட்டு காட்டம்

புதுடெல்லி,

குஜராத்தில் 2002ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட மதவாத வன்முறைகளில், பில்கிஸ் பானு விவகாரம் முக்கியமானது. கர்ப்பிணியாக இருந்த இளம்பென் பில்கிஸ் பானுவை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய உள்ளூர் கும்பல், சிறு குழந்தையான அவரின் மகள் உட்பட குடும்பத்தினரையும் கொடூரமான முறையில் படுகொலை செய்தது. காலத்தால் அழிக்கமுடியாத வடுவாகிப் போன அந்த சம்பவத்தில், 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அவர்களை முன்கூட்டியே விடுவிக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. அதன்படி அவர்களை குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்தது. இதனை எதிர்த்து, பில்கிஸ் பானு கடந்த மாதம் 30ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டார். அவரின் மனுக்கள் மீது, நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, பெலா திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு வரும் 13ஆம் தேதி விசாரணையை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி பெலா திரிவேதி தாமாகவே முன் வந்து வழக்கு விசாரணையில் இருந்து விலகினார். அவர் விலகியதற்கான காரணத்தையும் சுப்ரீம் கோர்ட்டு அமர்வு குறிப்பிடவில்லை. இதனால், வழக்கு பாதியில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘இந்த மனு மீதான விசாரணைக்கு புதிய அமா்வு அமைக்கப்படும். அதன் பிறகே, இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்’ என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அறிவித்திருந்தார். எனினும் சுப்ரிம்கோர்ட்டுக்கு குளிா்கால விடுமுறை வர இருப்பதால், இந்த மனுவை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதால், பில்கிஸ் பானு வழக்கை விசாரிக்க விரைவில் புதிய அமர்வு அமைக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நரசிம்மா ஆகியோரிடம் பில்கிஸ் பானுவின் வழக்குரைஞர் வேண்டுகோள் விடுத்தார். இதனைக் கேட்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி, கோரிக்கை ஏற்கப்பட்டது. தயவு செய்து ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் குறிப்பிட வேண்டாம். இது மிகவும் எரிச்சலூட்டுகிறது என தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.