அரியலூரில் போலீஸ் தாக்கி விவசாயி பலியான வழக்கு: விசாரணைக் குழு தொடர்பாக ஐகோர்ட் புதிய உத்தரவு

சென்னை: அரியலூரில் காவல் துறையினர் தாக்கி விவசாயி பலியான வழக்கின் விசாரணைக் குழுவில் குற்றம்சாட்டப்படும் காவலர்கள் இடம்பெறாததை உறுதி செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீசில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக அருண்குமார் என்பவரை தேடி, காசங்கோட்டையைச் சேர்ந்த விவசாயி செம்புலிங்கம் என்பவரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும், அங்கு செம்புலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினரை போலீசார் கடுமையாக தாக்கியதாகவும் கூறப்படுகிறது. கடந்த நவம்பர் 25-ம் தேதி நடந்த இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்த செம்புலிங்கம், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 8-ம் தேதி மரணமடைந்தார்.

போலீசாரின் தாக்குதலில் செம்புலிங்கம் இறந்ததால், இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி, செம்புலிங்கத்தின் உறவினர் கார்த்திகேயன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.அதில், “மாநில போலீசார் சம்பந்தப்பட்டுள்ள இந்த வழக்கை அவர்களே விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவே உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டு வர விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.

மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது செம்புலிங்கத்திடம் பெற்ற வாக்குமூலத்துக்கு முரணாக வேறு வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்துள்ளனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையை திரிக்கும் வாய்ப்புள்ளதால் தடயவியல் மருத்துவ துறை நிபுணர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதை வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மருத்துவர்கள் அடங்கிய குழு மூலம் பிரேத பரிசோதனை நடத்தி உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், அமைதியான முறையில் இறுதி ஊர்வலத்தை நடத்தவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, “சந்தேக மரணம் என்ற பிரிவில்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. உதவி ஆய்வாளர்தான் விசாரணையை நடத்தி வருகிறார்” என்று தெரிவித்தார். இதற்கு பதிலளித்த காவல் துறை தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ், “விசாரணையில் முன்னேற்றம் இருப்பதாகவும், உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்து, விவசாயி செம்புலிங்த்தின் பிரேதப் பரிசோதனை அறிக்கையையும் தாக்கல் செய்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, “இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள காவலர்கள் விசாரணை குழுவில் இடம் பெறாததை உறுதி செய்ய வேண்டுமென உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 22-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.