ஜூட் ஆண்டனி இயக்கத்தில் உருவாகும் படம் ‘2018’. கடந்த 2018ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்தில் 483 பேர் உயிரிழந்தனர். இதை அடிப்படையாக கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் டோவினோ தாமஸ், குஞ்சகோ போபன், ஆசிப் அலி, வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, கலையரசன், நரேன், லால், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தின் டீசர் வெளியிட்டு விழாவில் பேசிய நடிகர் மம்முட்டி, “இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசப் தலையில் முடி இல்லாவிட்டாலும், அவருக்கு அதிகமான மூளை இருக்கிறது. டீசரைப் பார்த்தேன். சிறப்பாக வந்துள்ளது” என தெரிவித்திருந்தார். அவரது இந்தப் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் மூத்த நடிகராக இருந்துகொண்டு மம்மூட்டி இவ்வாறு பேசியிருக்கக்கூடாது. அவர் இப்படி பேசியது தவறான முன்னுதாரணம் என பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து பேசிய ஜூட் ஆண்டனி, மம்மூட்டியின் அந்தக் கருத்து குறித்து தனக்கு எந்தக் கவலையும் அளிக்கவில்லை என்றும், இந்தப் பிரச்னையை ஊதிப் பெரிதாக்குவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார்
இந்நிலையில், தான் பேசியதற்கு நடிகர் மம்மூட்டி வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில், “அன்பர்களே, ‘2018’ படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் ‘ஜூட் ஆண்டனியை’ பாராட்டி உற்சாகத்தில் பயன்படுத்திய வார்த்தைகள் சிலரை காயமடையச் செய்ததற்கு வருந்துகிறேன். அத்துடன் இனி வருங்காலத்தில் இதுபோன்று நடக்காமல் பார்த்துகொள்வதில் கவனமாக இருப்பேன் என உறுதியளிக்கிறேன். நினைவூட்டிய அனைவருக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, கடந்த 2014ஆம் ஆண்டு நிவின் பாலி,நஸ்ரியா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற படமான ‘ஓம் சாந்தி ஓசானா’ மூலம் ஜூட் ஆண்டனி இயக்குநராக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து, ‘ஒரு முத்தாஸி கதா’, ‘சாராஸ்’ உள்ளிட்ட அவர் படங்களை இயக்கினார் என்பது நினைவுகூரத்தக்கது.