சென்னை மெரீனா மரப்பாதை நாளை மீண்டும் திறப்பு!

மாண்டஸ் புயல் காரணமாக சேதமடைந்த சென்னை மெரீனாவில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பாதை சீர் செய்யப்பட்டு நாளை மீண்டும் திறக்கப்படும்‌ என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல் தெரிவித்துள்ளர்.

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் மெரினா கடற்கரை உலகப் புகழ் பெற்றது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் மெரினா கடற்கரையை மேம்படுத்தி அழகுபடுத்தும் பணிகளை தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், சென்னை மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிரந்தர நடைபாதை திமுக அரசால் அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது.

இதனிடையே, மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மெரீனா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை சேதமடைந்தது. மாண்டஸ் புயல் கடந்த 10ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் கரையைக் கடந்தது. புயல் காரணமாக பலத்த காற்று வீசியது. கடல் அலைகள் கொந்தளிப்புடன் காணப்பட்டன.

இதனால், மெரீனா கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதை சேதமடைந்தது. பாதை அமைத்து சில நாட்களிலேயே சேதமடைந்தது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், கடற்கரை ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்குட்பட்டே, பாதை அமைக்க முடியும் எனவும், புயல் போன்ற பெருங்காற்று வீசும் சமயத்தில் மரங்களே வேரோடு சாயும் சமயத்தில் மரப்பாதை சேதமடைவது இயல்பு தான் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை மெரீனாவில் மாண்டஸ் புயல் காரணமாக சேதமடைந்த, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பாதை சீர் செய்யப்பட்டு நாளை மீண்டும் திறக்கப்படும்‌ என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல் தெரிவித்துள்ளர். புயல் மற்றும் கடல் அலை சீற்றத்தின் போது மரப்பாதையின் முகப்பு பகுதியில் உள்ள மரப்பலகைகளை அகற்றும் வகையில் அமைக்கப்பட உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, “சென்னை மெரீனா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட சிறப்புப் பாதை இயற்கை சீற்றத்தினால் சேதமடைந்துள்ளது. மெரீனா கடற்கரை பகுதியில் கான்க்ரீட் அமைப்புகளுக்கோ, இரும்புப் பொருட்களைப் பயன்படுத்தி கட்டமைப்புகளை உருவாக்க அனுமதி இல்லை. அதனாலேயே மரப்பாதை அமைக்கப்பட்டது. எதிர்காலத்தில் இன்னும் வலுவான பாதையை அமைக்க நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். சேதமடைந்த மரப்பாதை சீரமைக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும்.” என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.