மதுரை: மதுரை மாவட்டம், சமயநல்லூர் பகுதியில் கடந்த நவ. 19ல் விஜயகுமார் உட்பட சிலரிடம், அரசால் தடை செய்யப்பட்ட ரூ.3.93 லட்சம் மதிப்புள்ள புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். விஜயகுமாரை கோட்பா சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி விஜயகுமார், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, ‘‘மனுதாரர் கடந்த நவ. 19 முதல் சிறையில் உள்ளார். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. வாடிப்பட்டி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ரூ.10 ஆயிரத்திற்கு இருநபர் உத்தரவாதம் தாக்கல் செய்ய வேண்டும். ரூ.2 லட்சத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும். இதை சம்பந்தப்பட்ட வழக்கின் விசாரணையில் எந்தவித உரிமையாகவும் கோர முடியாது. தினசரி காலை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். இதுபோன்ற குற்றச்சம்பவங்களில் மீண்டும் ஈடுபடக்கூடாது. சாட்சிகளை கலைக்கவோ, தலைமறைவாகவோ முயற்சிக்கக்கூடாது’’ என பல்வேறு நிபந்தனைகளை விதித்து உத்தரவிட்டார்.
