பொங்கல் பரிசு தொகை: ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ.2,000?

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2,000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில், தைப் பொங்கல் பண்டிகையை மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், அரசு சார்பில், நியாய விலைக் கடைகள் மூலம், அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். மேலும், அதனுடன், ரொக்கப் பணமும் வழங்கப்படும்.

ஆனால், கடந்த முறை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, ரொக்கப் பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி, சர்க்கரை, பருப்பு, முந்திரி, திராட்சை, நெய், கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பை வழங்கியது. ரொக்கப் பணம் வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது.

அவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பில் பல்வேறு குளறுபடிகள் நிலவின. இந்த விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட எதிர்க்கட்சிகள், ஆளும் திமுக அரசை கடுமையாக சாடின. இதன் தொடர்ச்சியாக, சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்கிடையே, 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதி வாய்ந்த அரிசி அட்டைதாரர்களுக்கு, 1,000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்க தமிழக அரசு முடிவு செய்து உள்ளதாக, கடந்த சில வாரங்களாகவே செய்தி பரவி வருகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு பதிலாக, பரிசுத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பொங்கல் பரிசுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை, குடும்ப அட்டைதாரர்களிடையே எழுந்துள்ளது. இது குறித்து அவர்கள் கூறியதாவது:

கடந்த அதிமுக ஆட்சியில், பொங்கல் பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் நோக்கில், 2,500 ரூபாய் ரொக்கப் பணத்துடன், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதும், கடந்த பொங்கல் பண்டிகையின் போது, அதே போல், ரொக்கப் பணம் வழங்கப்படும் என எதிர்பார்த்தோம்.

ஆனால், வெறும் மளிகைப் பொருட்கள் தொகுப்பே வழங்கப்பட்டது. அதிலும் பல பொருட்கள் தரமற்றதாக இருந்தன. இந்நிலையில் இந்த முறை 1,000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளதாக செய்திகள் வருகின்றன. இந்தத் தொகை போதுமானதாக இருக்காது. 1,000 ரூபாய் என்பதை 2,000 ரூபாயாக வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

முன்னதாக, பொங்கல் பரிசுத் தொகையாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு 3,000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.