“பொம்மை முதலமைச்சர்… மணல் கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறார்" – எடப்பாடி பழனிசாமி காட்டம்

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தி.மு.க அரசை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “ பொய்யிலே பிறந்து பொய்யிலே வாழும் தமிழகத்தின் முதலமைச்சரும், அமைச்சர் பெருமக்களும், அவருக்கு கீழ் பணியாற்றும் ஒரு சில உயர் அதிகாரிகளும், அம்மாவின் ஆட்சியில் தொடங்கப்பட்ட, திட்டமிடப்பட்ட திட்டங்களை, ஈர்த்த முதலீடுகளை, விடியா அரசு கொண்டு வந்ததாக ஸ்டிக்கர் ஒட்டி கையாளாகாத அரசை காப்பாற்ற முயற்சிக்கிறார்கள். கடந்த 19 மாத திராவிட மாடல் ஆட்சியின் வெப்பம் தாங்காமல் மக்கள் துடித்து வருவது கண்கூடு. ஆனால், பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் தொலைபேசியில் தன்னை பாராட்டுவதாக தனக்குத்தானே சுய பெருமை பேசுகிறார். இவர் திருவாய் மலர்ந்த அருளிய பின்பு கடந்த ஒரு வாரங்களில் அரங்கேறிய சில முக்கிய சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை இங்கே தோலுரித்து காட்டுகிறேன்.

YouTube

ஒரு பிரபல நடிகர் நடத்தி வந்த youtube சேனலை ஆளும் கட்சியின் வாரிசு ஒருவர் வாங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. டிசம்பர் மாதம் 8-ம் தேதி அந்த சேனலின் சர்வர் அறையில் விஜயவாடாவை சேர்ந்த பாலாஜி என்ற ஊழியர் மர்மமான முறையில் இறந்து கிடந்ததார். இதனை மர்ம மரணம் என்று வழக்கு பதிவு செய்த காவல்துறை இதுவரை நேரடியாக கள ஆய்வு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. காவல்துறை செயல்படாமல் மௌனமாக இருப்பதற்கான காரணம் புரியவில்லை. இந்த நிகழ்வில் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி தக்க தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

ஜெயங்கொண்டம்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே காசங்கோட்டை கிராமத்தில் இரு வகுப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அருண்குமார் என்பவர் உட்பட சிலர் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. 25.11.2022 அன்று கைது செய்ய அருண்குமார் வீட்டிக்கு காவல் துறையினர் சென்றிருக்கின்றனர். அங்கு அவர் இல்லாததால் 53 வயதான செம்புலிங்கம் என்பவர் உட்பட இருவரை பிடித்து கடுமையாக தாக்கியதாகவும், பலத்த காயமடைந்த செம்பு லிங்கம், டிசம்பர் 8-ம் தேதி இரவு மரணமடைந்துவிட்டார். வயிற்றில் காவலர்கள் எட்டி உதைத்ததால், வயிற்றில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக அவர் மரணமடைந்ததாகவும், சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றிருக்கின்றனர். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்தின் முன்னிறுத்தி தக்க தண்டனை பெற்றுத் தர வேண்டும்.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள அல்லிக்குளம் பகுதியில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வரும் முனுசாமி கொலை செய்யப்பட்டார். கஞ்சா வியாபாரம் மற்றும் கடத்தல்களை பற்றி காவல்துறைக்கு தகவல் கொடுக்கும் இன்பார்மராக செயல்பட்டு வந்தவர் மீது ஆத்திரமடைந்த கஞ்சா வியாபாரிகள், அவரை வெட்டி படுகொலை செய்திருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

சென்ட்ரல் ரயில்நிலையம்

கடந்த 2021 தங்களுடைய பகுதியில் கஞ்சா வியாபாரம் நடைபெறுகிறது என்று காவலர்களுக்கு செய்திகளை கூறிய திருப்பூரை சேர்ந்த வாசிம் அக்ரம் மற்றும் சோழவரத்தை சேர்ந்த சிலம்பரசன் ஆகியோரை தொடர்ந்து கடந்த 3.12.2022 அன்று முனுசாமி என்ற இன்ஃபார்மர் கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. உண்மையில் கஞ்சா போன்ற போதைப் பொருள்கள் நடமாட்டத்தை இந்த விடிய அரசின் ஏவல் துறை கட்டுப்படுத்த நினைக்கிறதா? அல்லது ஆளும் கட்சியினரின் கண்ணசைவுக்கு ஏற்ப நடக்க நினைக்கிறதா? என்று சந்தேகம் வருகிறது.

கஞ்சா

கஞ்சா விற்பனை அறவே தடுக்கப்பட்டதாகவும், கஞ்சா விற்பனை செய்தவர்கள் கைது எண்ணிக்கை, பிடிப்பட்ட கஞ்சாவின் மதிப்பு என்று மாதம் ஒருமுறை செய்தி குறிப்பு வழங்கி சுய தம்பட்டமடித்துக் கொள்ளும் இந்த விடிய அரசின் ஏவல்துறை, இதற்கு என்ன பதில் சொல்லும் என்று தெரியவில்லை.

ஏற்கெனவே ராமநாதபுரம் மாவட்டம் வேதாரண்யம் அருகே கடந்த 27.11.2022 அன்று சர்வதேச மதிப்பில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள விலை உயர்ந்த போதை பொருள் கலக்கப்பட்ட, 20 லிட்டர் வாட்டர் கேன்கள் சாதிக் அலி என்பவரின் நாட்டு படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருப்பதை கடற்படை போலீஸார் தடுத்து குற்றவாளிகளை கைது செய்தனர்.

மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டம்

இதில் சம்பந்தப்பட்ட கீழக்கரை நகராட்சி 19-வது வார்டு தி.மு.க கவுன்சிலர் சர்ப்ராஸ் என்பவரும், கீழக்கரை தி.மு.க முன்னாள் கவுன்சிலர் ஜெயினுலாபிதீன் என்பவரும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தவறிழைத்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி நானும் அறிக்கை வெளியிட்டிருந்தேன். உடனே இவை அனைத்தும் சில ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள நுண்ணுயிர் கலந்த உர வாட்டர் கேன்கள் என்று செய்திகள் வெளிவந்தன.

சில ஆயிரம் மதிப்புள்ள வாட்டர் கேன்கள் ஏன் வேறு மாநிலங்களிலிருந்து சென்னை வழியாக ராமநாதபுரத்துக்கு கடத்தப்பட்டு, பின்னர் இலங்கைக்கு கடத்தப்பட இருந்தது என்ற மிகப்பெரிய கேள்விகளுக்கு இந்த ஏவல் துறையிடம் இருந்து தகுந்த பதில் இல்லை.

மண்டபம் காவல் நிலையம்

இந்த நிலையில், கடந்த 12.12.2022 அன்று மீண்டும் ராமநாதபுரம் மாவட்டத்தில், மண்டபம் என்ற இடத்தில் சுமார் 160 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா ஆயில், கிரிஸ்டல் மெத்தெம்பேட்டமைன் என்ற போதைப் பொருள்களை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைப்பற்றியிருக்கின்றனர் என்று நாளிதழ்களில் செய்திகள் வந்திருக்கின்றன. சென்னையில் இருந்து இலங்கைக்கு கடத்திச் செல்வதற்காக, இந்த போதைப் பொருள்களை கடத்தி வந்த சென்னை கொடுங்கையூரை சேர்ந்த பால்ராஜ் மற்றும் தனசேகர் ஆகிய இரண்டு பேரை மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் கைதுசெய்திருக்கின்றனர்.

சென்னை முதல் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வரை உள்ள அத்தனை சோதனை சாவடிகளையும் கடந்து எந்தவித தடையும் இன்றி சுமார் 160 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள், மண்டபம் வந்தது எப்படி என்று மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினர் ஆச்சரியப்படுகின்றனர்.

எடப்பாடி பழனிசாமி

எனவே இந்த விடிய அரசின் ஏவல் துறை ”வாய்ச்சொல்லில் வீரரடி” என்று இல்லாமல் போதை மருந்து கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை காக்கும் வேலையை பார்க்காமல் மக்கள் தன்னை பாராட்டுவதாக கனவு உலகில் மிதந்து, மணல் கோட்டை கட்டிக் கொண்டிருக்கிறார்.

தன் குடும்பத்தின் கையில் மட்டுமே அரசு அதிகாரம் இருக்க வேண்டும் என்ற சர்வாதிகார மனப்பான்மையுடன் செயல்படுகிறார். தற்போதைய இந்த அவலம் நிர்வாகத் திறனற்ற விடியா தி.மு.க ஆட்சியில் தொடருமேயானால் திமுக குடும்பத்தின் ஆக்டோபஸ் ஆட்சியால் பாதிக்கப்படும் மக்கள் கொதித்தெழுந்து ஆட்சியாளர்களை விரட்டி அடிப்பார்கள் என்று எச்சரிக்கிறேன்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.