மீண்டும் வருமா புயல்?… இன்று வலுவடைகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி – இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அலெர்ட்

வங்கக்கடலில் கடந்த 5ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இந்தத் தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுவடைந்தது. அதற்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது. 2022ஆம் ஆண்டுக்கான வடகிழக்கு பருவமழையின் முதல் புயல் அது. புயலாக வலுவடைந்த மாண்டஸ் அதற்கடுத்து தீவிர புயலாக மாறி வங்கக்கடலிலேயே நிலை கொண்டிருந்தது. இதன் காரணமாக வட தமிழ்நாடு கடலோர மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. ஆங்காங்கே பலத்த காற்றும் வீசியது. சென்னையைப் பொறுத்தவரை மழை கொட்டி தீர்த்தது. அதேபோல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்டும் விடுக்கப்பட்டிருந்தது.

இச்சூழலில் தீவிர புயலாக இருந்த மாண்டஸ் புயலாக வலுவிழந்து அதன் மையப்பகுதியானது மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 10ஆம் தேதி அதிகாலை மாமல்லபுரத்தில் மாண்டஸ் புயலானது முழுமையாக கரையை கடந்தது. கரையை கடக்கும்போது காற்றானது 70 முதல் 80 கிலோமீட்டர்வரை பலமாக வீசியது. மாண்டஸ் புயல் கரையை கடந்த பிறகும் தமிழ்நாட்டி இரண்டு நாள்கள் மழை பெய்தது.

இந்நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “இந்திய பெருங்கடல், தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலில் ஒட்டிய பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து இன்று மேலும் வலுவடையும் 
மேலும் அது படிப்படியாக மேற்கு நோக்கி நகர்ந்து நாளை மறுநாள்வரை தீவிர நிலையிலேயே இருக்கும். இதனால் அந்தமான் நிகோபார் தீவுகளில் இன்று கனமழை பெய்யயும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே, கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் வருகிற 18ஆம் தேதிவரை ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.