உலக சினிமாவின் 'அவதார்' ஜேம்ஸ் கேமரூன்! லாரி டிரைவர் முதல் உலகின் நம்பர் 1 இயக்குநர் வரை!

இன்று அவதார் 2 உலகம் முழுவதும் கிட்டதட்ட 50 ஆயிரம் திரையரங்குகளுக்கு மேல் வெளியாகியுள்ளது. 12 ஆண்டு கால ரசிகர்களின் காத்திருப்பதை பூர்த்தி செய்துள்ளார் படத்தின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன். உலக சினிமாவின் அவதாரமாக இவர் மாற என்ன காரணம்? யார் இவர்? இவருக்கு அவதார் படம் எப்படி சாத்தியமானது? உங்கள் தேடல்களுக்கான பதில்கள் இதோ.

1954-ம் ஆண்டு கனடா நாட்டில் பிறந்தவர் தான் ஜேம்ஸ் பிரான்சிஸ் கேமரூன். இவரை திரைப்பட இயக்குநராக நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் இவர் ஒரு சிறந்த ஆழ் கடல் ஆராய்ச்சியாளர் என்பது பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எப்படி இவரால் அவதார் 2வில் கடலையும், கடல் வாழ் உயிரினங்களையும் இப்படி நேர்த்தியாக காட்ட முடிந்தது என்று நினைக்கும் நேரத்தில் தான் இந்த விஷயம் தெரியவந்தது. 

ஜேம்ஸ் கேமரூன் கல்லூரி Drop Out Student. அவருக்கு சினிமா இயக்குநர் ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. ஆரம்பத்தில் ட்ரக் டிரைவராக வேலை பார்த்ததாக அவரது பயோபிக் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு தி ஒரிஜினல் ஸ்டார் வார்ஸ் படம் பார்த்த இவர் மீண்டும் தனது கனவை நோக்கி பயணித்துள்ளார். 1977-ம் ஆண்டிலிருந்து இயக்குநர் வாய்ப்புக்காக காத்திருந்து, விடா முயற்சியால் அவர் இயக்கிய படம் தான் தி டெர்மினேட்டர். இந்த படத்தின் கதையை தனது காரில் அமர்ந்து தான் இவர் எழுதினாராம். ஆனால் இந்த படத்துக்கு முன் பிரானா படத்தையும் இவர் Ovidio உடன் இணைந்து இயக்கி இருந்தார். இவரது பொழுதுபோக்கே ஆபத்தான ஆழ்கடல் பகுதிக்கு சென்று வருவது தானாம். இப்போது இவரது திரைப்பயணம் குறித்து பார்க்கலாம். 

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான தி டெர்மினேட்டர் படம் உலகம் முழுவதிலும் எக்கச்சக்க ரசிகர்களை கவர்ந்தது. நமக்கு பிடித்த ஹால்வுட் படங்களின் லிஸ்ட்டில் கண்டிப்பாக ஒரு படமாவது இவரது படைப்பாக இருக்கும். ஏலியன்ஸ், Terminator 2 The Judgement Day, Titanic, Avatar என பிற மொழி ஜாம்பவான்களை மிரள வைக்கும் அளவுக்கு படங்களை இயக்கியுள்ளார். ராம்போ 2 படத்தின் திரைக்கதையை இவர் தான் எழுதினார். டைடானிக் படம் கண்ட வெற்றியையும், உணர்வையும் இதுவரை வேறெந்த காதல் படமும் தந்ததில்லை. கிட்டதட்ட படம் வெளியாகி 25 ஆண்டுகளை நெருங்கும் நிலையில், இப்போதும் Jack  & Rose காதல் கொடுக்கும் உணர்வு புதிதாகவே தான் உள்ளது. 

1997-ல் டைட்டானிக் படம் வெளியானது. இந்த படத்தை அடுத்து ஜேம்ஸ் கேமரூன் தனது இயக்கத்தில் அடுத்த படைப்பை உருவாக்க 12 ஆண்டுகள் எடுத்துக்கொண்டார். 2009-ம் ஆண்டு உலகமே எதிர்பார்த்து காத்திருந்த அவதார் வெளியானது. அப்போதே 1000 கோடிகளை தாண்டிய பிரம்மாண்ட வசூல் சாதனையை படைத்தது. 

ஆழ் கடல் ஆராய்ச்சியாளரான இவருக்கு கடல் மீதான பந்தம் டைட்டானிக்கிலேயே தொடங்கிவிட்டது. கப்பல் மூழ்கும் காட்சிகளில் நம் ஹார்ட் பீட்டை எகிற வைத்துவிடுவார். அடுத்ததாக அவதாரிலும் அவரின் வித்தைகள் தொடர்ந்தது. கதையை 90-களிலேயே எழுதிவிட்டார். ஆனால் அவதார் எடுக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி அப்போது இல்லை என்பதால் காத்திருந்து ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கி படத்தை அவர் வெளியிட 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. 2009 ஆம் ஆண்டு 237 மில்லியன் அமெரிக்க டாலர் பட்ஜெட்டில் உருவான இந்தப்படம், 2.9 பில்லியன் வசூலை அள்ளியது. அதாவது கிட்டதட்ட 2000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது. Avatar: The Way of Water படம் இப்போது வெளியாகியுள்ளது. இந்தப் படமும் நிச்சயம் பாக்ஸ் ஆபீஸில் மிரட்டும் என்பதில் சந்தேகமில்லை.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.