தடுப்பணையை சீரமைக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

வருசநாடு: மொட்டப்பாறை மூல வைகை ஆற்றில் சேதமடைந்த நிலையில் உள்ள தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், கடமலை மயிலை ஒன்றியத்தில் மூல வைகையாற்றின் குறுக்கே மூன்றுக்கு மேற்பட்ட இடங்களில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் வருசநாடு அருகே மொட்டப்பாறை பகுதியில் உள்ள தடுப்பணை காட்டாற்று வெள்ளத்தில் பலத்த சேதமடைந்துள்ளது. இந்த தடுப்பணை நீண்ட காலமாக சீரமைக்கப்படாமல் உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது இந்த தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என இப்பகுதிவிவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் இப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, இந்த தடுப்பணையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து வருசநாட்டை சமூக ஆர்வலர் வேல்முருகன் கூறுகையில், ‘‘தடுப்பணைணை சீரமைத்தால் தான் எங்கள் பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். மேலும் ஆற்றங்கரையோரம் மண் அரிப்பு ஏற்படாது. எனவே விரைவில் தடுப்பணையை சீரமைக்க கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘சேதமடைந்த தடுப்பணையை ஏற்கனவே ஆய்வு செய்து விட்டோம்.

கூடுதல் நிதி ஒதுக்கீடு தொகை ரூ.2.13 கோடி வந்தபின்பு விரைவில் பணி துவங்கும்’’ என்றனர்.  வருசநாடு விவசாயி சேகர் கூறுகையில், ‘‘தடுப்பணையை விரைவில் கட்டி முடிக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு மற்றும் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.