பாஜக பிரமுகர் கொலை வழக்கு: சிறையில் இருந்த இருவருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

பரமக்குடி நகர பா.ஜ.க. செயலாளர் முருகேசன் கொலை வழக்கில் செய்யாத குற்றத்திற்காக கைதாகி சிறை சென்றதால் மனுதாரர்கள் அனுபவித்த துன்பங்களுக்காக அவர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என மதுரை கிளை நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டுள்ளார்.
பரமக்குடி பகுதியைச் சேர்ந்த ராஜா முகமது மற்றும் மனோகரன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அதில், ‘பரமக்குடி நகர பா.ஜ.க. செயலாளர் முருகன் என்ற முருகேசன்இ கடந்த 19.3.2013 அன்று வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து பரமக்குடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் வழக்குப்பதிவு செய்து, எங்கள் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.
image
பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அதன்பேரில் விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. போலீசார், இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளான பக்ருதீன் என்ற போலீஸ் பக்ருதீன், பிலால் மாலிக், முகமது இஸ்மாயில் என்ற பன்னா இஸ்மாயில் ஆகியோர்தான் குற்றவவாளிகள் என கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததோடு எங்களை விடுவித்தனர்.
கொலை வழக்கில் எங்களை சிறையில் அடைத்ததால், அவமானம் தாங்காமல் சொந்த ஊரில் இருந்து வேறு இடத்திற்கு குடும்பத்துடன் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதற்கு காரணமான இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடவும், எங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.’ என மனுவில் கூறியிருந்தனர்.
image
இந்த மனுக்களை நீதிபதி புகழேந்தி விசாரித்து பிறப்பித்த உத்தரவில், முருகேசன் கொலை வழக்கில் கைதாகி சிறை சென்றதால் அனுபவித்த துன்பங்களுக்காக, மனுதாரர்களுக்கு தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும். ராஜா முகமதுக்கு 10 லட்சத்தையும், மற்றொரு மனுதாரர் மனோகரனுக்கு 8 லட்சத்தையும் இழப்பீட்டுத் தொகையாக 16 வாரத்தில் அரசு செலுத்த வேண்டும்.
இந்த தொகையை தற்போது தர்மபுரி மாவட்டத்தில், குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் ரத்னகுமாரிடம் இருந்து வசூலித்துக் கொள்ளலாம் என உத்தரவிட்டார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.