டெல்லி நகர் நிகாம் பிராத்மிக் வித்யாலயாவில் நேற்று (டிச. 16) காலை 11.15 மணியளவில் கொடூர சம்பவம் ஒன்று நடந்தது. ஆசிரியர் கீதா தேஷ்வால், வந்தனாவை ஆத்திரத்தில் முதல் மாடி வகுப்பறையில் இருந்து தூக்கி வீசியுள்ளார். அதற்கு முன்பு ஒரு கத்தரிக்கோலை பயன்படுத்தி மாணவியை தாக்கினார்.
மற்றொரு ஆசிரியையான ரியா, அந்த ஆசிரியர் தடுத்துள்ளார். இருப்பினும், அவரை மீறி மாணவியை கீதா தூக்கியெறிந்துள்ளார். முதல் மாடியில் இருந்து சிறுமி விழுந்ததும், ஏராளமானோர் திரண்டனர். பலத்த காயமடைந்த குழந்தையை அங்கிருந்த ஒருவர், மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.
அங்கு மாணவிக்கு சிடி ஸ்கேன் உட்பட தேவையான அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டுள்ளன. குழந்தை பாதுகாப்பாகவும், நலமாகவும் உள்ளது என்றும் நன்றாக பேசுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன் குழந்தை கீழே வீசப்பட்டதை அறிந்த மாணவி வந்தனாவின் தாய் கதறி அழுதார்.
இச்சம்பவத்தை அடுத்து, பள்ளிக்கு அருகே இருந்த குடியிருப்பாளர்கள் போலீசாரை அழைத்தனர். அவர்கள் ஆசிரியரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் கொலை முயற்சி குற்றச்சாட்டை எதிர்கொள்ள நேரிடும் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஸ்வேதா சவுகான், சாட்சிகளின் வாக்குமூலத்தை மேற்கோள் காட்டி கூறினார். சிரியை கைது செய்யப்பட்ட நிலையில், பள்ளியை நடத்தும் டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (எம்சிடி) அவரை இடைநீக்கம் செய்துள்ளது.
குழந்தை விழுந்த இடத்தில், ஒரு ஜோடி கையுறைகள் மற்றும் சில எழுதுபொருட்கள் சிதறிக் கிடந்தன. இந்த சம்பவத்தையடுத்து ஆத்திரமடைந்த பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் பள்ளிக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் வந்து ஆசிரியர் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மேலும் படிக்க | நடிகை ஐஸ்வர்யா ராயின் போலி பாஸ்போர்ட்! பழுவேட்டையர் நந்தினிக்கே ஆப்பு?