“ராகுலுக்கும், காங்கிரஸுக்கும் நம் ராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லை" – மத்திய அமைச்சர் தாக்கு

அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் எல்லைப்பகுதியில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே நடந்த மோதல் காரணமாக, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை காங்கிரஸ் சாடி வருகிறது. அந்த வரிசையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “சீன ராணுவம் நம் ராணுவ வீரர்களை அடித்து விரட்டுகிறது. அவர்களின் அச்சுறுத்தல் தெளிவாக இருக்கிறது. மேலும் அவர்கள் போருக்கு தயாராகி வருகிறார்கள். ஆனால், இந்திய அரசாங்கம் தூங்கிக்கொண்டிருக்கிறது” என்று பா.ஜ.க அரசை நேற்று விமர்சித்திருந்தார்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தியின் இத்தகைய விமர்சனத்துக்கு பா.ஜ.க தலைவர்கள் பலர் எதிர்ப்புக்குரல் கொடுத்துவரும் நிலையில், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸை ஒருசேர இன்று சாடியிருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அனுராக் தாகூர், “இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியபோதும் அவர் எங்களிடம் கேள்வியெழுப்பினார். ராகுல் காந்திக்கும், காங்கிரஸுக்கும் நம் ராணுவத்தின் மீது நம்பிக்கை இல்லை. இது 1962-ன் இந்தியா அல்ல, 2014-ன் இந்தியா. பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா முன்னேறி வருகிறது.

மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் 10 ஆண்டுகளாக நம் ராணுவத்துக்கு போர் விமானங்கள், குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள், ஸ்னோ பூட்ஸ் கூட வாங்க முடியவில்லை. நம் ராணுவத்துக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்… இன்று இந்தியாவில் 300-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பொருள்கள் தயாரிக்கப்படுகின்றன. இப்போது இந்தியா பாதுகாப்பு உபகரணங்களின் இறக்குமதியாளராக இல்லாமல் ஏற்றுமதியாளராக உள்ளது. டோக்லாம் சம்பவத்தின்போது கூட, பிரதமர் மோடியும், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் நம் ராணுவத்தைப் பார்வையிட்டனர்” என்று தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.