ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் சசிகலா அளித்த வாக்குமூலத்தில்,”ஜெயலலிதா கடைசி வரை தீபா மீது நல்ல மதிப்பு கொண்டிருக்கவில்லை. `ஜெ.தீபா அவரின் தாயைப் போலவே நடந்து கொள்கிறார்’ என பலமுறை ஜெயலலிதா என்னிடம் கூறியுள்ளார். இதன் காரணமாகவே ஜெ.தீபா மீது ஜெயலலிதாவுக்கு நல்ல மதிப்பு ஏற்படவில்லை” எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஜெ. தீபா சசிகலாவைச் சாடி பரபரப்பான ஆடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், “என் தாய் விஜயலட்சுமி பற்றி பேசுவதற்கு சசிகலா என்ற மூன்றாம் நபருக்கு, எங்கள் குடும்பத்தோடு தொடர்பு இல்லாத மூன்றாம் நபருக்கு எந்த அருகதையும் இல்லை. இதனை எச்சரிக்கையாகவே சசிகலாவுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தால்தான் அத்தைக்கும் எங்கள் குடும்பத்திற்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. இதை மாற்றி சசிகலா தன் மீது இருக்கும் தவறை மறைத்து, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார். சசிகலாவை போன்று பொய்யர் நாங்கள் கிடையாது. என் அம்மாவைப் பற்றி அத்தை தவறாக சொன்னார்கள் என்று தப்பு தப்பாக என் குடும்பத்தை பற்றி விமர்சிப்பது சரியில்லை.

இதற்காக சட்டபூர்வமாக நடவடிக்கை எடுப்பேன். முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவிடம் புகார் அளித்தது உண்மைதான், ஆனால் அது எங்கள் அத்தை ஜெயலலிதா மேல் இல்லை. சசிகலா மற்றும் அவரை சுற்றி இருப்பவர்களால் ஜெயலலிதாவுக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்பதாலேயே புகார் கொடுத்தோம். கருணாநிதி, வாழப்பாடி ராமமூர்த்தி ஆகியோரை என் அம்மா சந்தித்ததே இல்லை.
அத்தைக்கு என்னை பிடிக்காது என்று சொல்வதும், சகோதரர் தீபக்கை மட்டும்தான் பிடிக்கும் என்பதும் பொய். இதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது. அத்தைக்கு ஏற்பட்ட களங்கத்துக்கு சசிகலாவும் அவருடைய உறவினர்களுமே காரணம். சசிகலா தன்னுடைய ஆதாயத்திற்காக அத்தையின் நெருக்கத்தை பயன்படுத்திக் கொண்டார்” என தீபா ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.