துணிவு இரண்டாவது சிங்கிளில் வாய்ஸ் எங்கே?… விளக்கமளித்த மஞ்சுவாரியர்

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் மூன்றாவது முறையாக இணைந்திருக்கும் படம் துணிவு. முதல் இரண்டு படங்களும் வசூல் ரீதியாக கொண்டாடப்பட்டாலும் விமர்சன ரீதியாக கலவையான கமெண்ட்ஸ்களையே பெற்றன. இதன் காரணமாக இந்தப் படம் மூலம் அஜித்தும், வினோத்தும் தங்களை நிரூபிக்க காத்திருக்கின்றனர். க்ரைம் சம்பந்தப்பட்ட கதை எனவும், முழுக்க முழுக்க அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கிறார் எனவும் பரவலாக பேச்சு எழுந்திருக்கிறது. எனவே ஏகே ரசிகர்கள் படத்தை மிகவும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அதற்கேற்றார்போல் வினோத்தின் சமீபத்திய பேட்டிகளும் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளன.

பொங்கலுக்கு படம் வெளியாகவிருக்கிறது. விஜய் நடித்த வாரிசு படமும் துணிவு படத்துடன் பொங்கலுக்கு வெளியாகவிருப்பதால் இப்போதே சமூக வலைதளங்களில் ரசிகர்களின் மோதல் களைகட்ட தொடங்கியுள்ளது. அதற்கேற்றார்போல் வாரிசு தயாரிப்பாளர் தில்ராஜுவின் கருத்து சர்ச்சையாக அதற்கும் அஜித் ரசிகர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

இதற்கிடையே துணிவு படத்தின் முதல் சிங்கிளான சில்லா சில்லா பாடல் சமீபத்தில் வெளியானது. முதல்முறையாக அஜித்துக்கு ஜிப்ரான் இசையமைத்தாலும் அந்தப் பாடல் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தச் சூழலில் துணிவு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான “காசேதான் கடவுளடா” இன்று வெளியானது. முதல் பாடல் போலவே இந்தப் பாடலும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

அதேசமயம் பாடலின் லிரிக் வீடியோவில் மஞ்சுவாரிய பாடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் பாடலில் மஞ்சுவின் குரல் கேட்கவில்லை. இதனையடுத்து பலரும் அதுதொடர்பாக கேள்வி எழுப்பிவந்தனர். மேலும் சிலர் அதனை வைத்து ட்ரோல் செய்யவும் ஆரம்பித்தனர். 

இந்நிலையில் மஞ்சுவாரியர் தனது ட்விட்டர் பக்கத்தில், “துணிவு படத்திலிருந்து காசேதன் கடவுளின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் என் குரல் கேட்கவில்லையே என்று கவலை வேண்டாம். லிரிக்கல் வீடியோ பதிப்பிற்காக அது பதிவு செய்யப்பட்டது. உங்களுடைய அக்கறைக்கு நன்றி. வேடிக்கையான ட்ரோல்களை ரசித்தேன்” என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.