பேரையூர் அருகே மயான பாதை கேட்டு இறந்தவர் உடலுடன் மறியல் போராட்டம்; போலீஸ் வேன் கண்ணாடி உடைப்பு; 36 பேர் கைது

பேரையூர்: பேரையூர் அருகே மயானத்திற்கு பாதை கேட்டு இறந்தவர் உடலை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் வேன் கண்ணாடியை உடைத்தனர். இதையடுத்து 4 பெண்கள் உள்பட 36 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், பேரையூர் அருகேயுள்ளது சிலைமலைப்பட்டி. இந்த ஊரில் 100க்கும் மேற்பட்ட ஒரு பிரிவை சேர்ந்த குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு கிருஷ்ணன் மனைவி காளியம்மாள்(70) என்பவர் இறந்தார். இவரது மகன் இளங்கோ ராணுவத்தில் பணி புரிந்து வருகிறார். இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மயானத்திற்கு பொதுப்பாதை கிடையாது. இதனால் தனிநபருக்கும், ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கும் சொந்தமான இடத்தின் வழியாக சென்று இறந்தவர்கள் உடலை அடக்கம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் ஆதித்தமிழர் கட்சியின் மாநில பொதுசெயலாளர் விஸ்வகுமார் தலைமையில் நிர்வாகிகள், பொதுமக்கள் மயானத்திற்கு பொதுப்பாதை வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பேரையூர் – எம்.சுப்புலாபுரம் பைபாஸ் சாலை சிலைமலைப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். பேரையூர் தாசில்தார் ரவிச்சந்திரன் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தியபோது, உசிலம்பட்டி ஆர்டிஓ வரவேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர். பின் திடீரென இறந்த காளியம்மாளின் உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

டிஎஸ்பி இலக்கியா தலைமையிலான போலீசார், அவர்களை கலைந்துசெல்லும்படி கூறினர். இதனை ஏற்காததால் போலீசார் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். கைதானவர்கள் ஆத்திரத்தில் வேன் கண்ணாடிகளை உடைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பலரும் அங்கிருந்து வெளியேறினர். இதனால் சாலையில் இருந்த இறந்த காளியம்மாள் உடல் அருகே நெருங்கிய உறவினர்கள் மட்டும் இருந்தனர். பின் அவர்கள் போலீஸ் பாதுகாப்புடன் உடலை எடுத்துச்சென்று வயல் வழியாக சென்று மயானத்தில் தகனம் செய்தனர். இந்த போராட்டத்தில் பங்கேற்ற 4 பெண்கள் உள்பட 36 பேர் கைது செய்யப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.