ராகுல் காந்தியுடன் கை கோர்க்கிறார் கமல் ஹாசன் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகக்குழு, செயற்குழு மற்றும் மாவட்ட செயலாளர்கல் கூட்டம் இன்று சென்னை அண்ணா நகரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கூட்டமானது இன்று அக்கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்குப் பின்னர், அக்கட்சியின் துணைத் தலைவர் மவுரியா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “டெல்லியில் வரும் 24ஆம் தேதி நடைபெறும் பாரத் ஜோடோ யாத்ராவில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்துகொள்கிறார். அவருடன் மக்கள் நீதி மய்யம் கட்சியினரும் கலந்துகொள்கிறோம்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகத்தான் இந்த யாத்திரையில் பங்கேற்கிறோம். ஆர்டிஐ சட்டத்திற்கு பாதிப்பு ஏற்பட்டபோது, மநீம தலைவர் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த எதிர்ப்பின் காரணமாக மக்களின் கருத்துக் கேட்பு அடுத்த மாதம் 2-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொள்ள காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி, அவரது கைப்பட எழுதி அழைப்பு விடுத்துள்ளார். இது கூட்டணிக்கானது அல்ல. இந்திய ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு யாத்திரை.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வெற்றிக்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறோம். தொடர்ந்து கட்சியைப் பலப்படுத்தும் விதமாக ஆங்காங்கே தொடர் கூட்டங்கள் நடத்தப்பட உள்ளது” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.