Avatar : The way of Water – 2 நாள்களில் இமயம் தொட்ட அவதார் 2 ; வசூலில் பெரும் சாதனை!

உலகமே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த அவதார் 2 திரைப்படம் கடந்த டிச. 16ஆம் தேதி வெளியானது. அவதார் படத்தின் முதல் பாகம் 2009ஆம் ஆண்டு டிச. 18ஆம் தேதி வெளியாகி பிரம்மாண்டு வெற்றியை பெற்றது. இதையடுத்து, சுமார் 13 ஆண்டுகள் கழித்து, அதே ஜேம்ஸ் கேம்ரூன் இயக்கத்தில் அவதார் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி உள்ளது. 

உலகம் முழுவதும் 2D, 3D, IMAX ஃபார்மட்களில் வெளியாகியுள்ளது. அவதார் 2 திரைப்படம்இந்தியாவிலும் உலகெங்கிலும் அதன் முதல் பாகத்தை போலவே விமர்சகர்களிடம் இருந்து சிறப்பான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. 

இப்படத்தின் டிக்கெட்டுகளின் விலை வழக்கத்தை விட சற்று கூடுதலாக உள்ளது என கூறப்படுகிறது. இருப்பினும், மக்கள் இப்படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். படம் வெளியாகி இன்றோடு மூன்று நாள்கள் ஆகிவிட்ட நிலையில், இந்திய அளவில் கடந்த இரண்டு நாள்களில் இப்படத்தின் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. 

அதாவது, அவதார் 2 திரைப்படம் வெளியான இரண்டு நாள்களில் மட்டும் மொத்தம் ரூ. 100 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக திரைத்துறை வணிக ஆய்வாளரான ரமேஷ் பாலா ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். முன்னதாக, இந்தியாவில் முதல் நாளில் மட்டும் ரூ. 41 கோடி வசூலித்த அவதார் 2, தற்போது ரூ. 100 கோடியை தாண்டி அசத்தியுள்ளது. 

மேலும், இந்த வார இறுதி முடிவில், ரூ. 135 கோடி முதல் ரூ. 140 கோடி வரை அவதார் 2  வசூலிக்க வாய்ப்புள்ளது என்றும், இதேபோன்று சென்றால், ஒரே வாரத்தில் இந்தியா முழுவதும் ரூ. 300 கோடி வசூலித்து பெரும் சாதனையை படைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

இதன்மூலம், இந்தியாவில் இந்தாண்டு பெரும் வெற்றி பெற்ற ஆர்ஆர்ஆர், பிரம்மாஸ்தரா படங்களின் முதலிரண்டு நாள் சாதனையை அவதார் 2 திரைப்படம் முறியடித்துள்ளது. ஆனால், கேஜிஎப் 2 திரைப்படம்தான் அவதார் 2 படத்தை விட முன்னிலையில் உள்ளது. அவதார் முதல் பாகத்திற்கு கிடைத்த ஓப்பனிங் கலெக்ஷனை விட இந்த படம் ஜேம்ஸ் கேம்ரூனுக்கு பெரும் வெற்றியை கொடுத்துள்ளது என்றுதான் கூற வேண்டும். 

ஆனால், அவதார் 1 திரைப்படம்தான் உலகத்திலேயே தற்போதுவரை அதிக வசூல் செய்த திரைப்படமாகும். அந்த திரைப்படம் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் வசூல் செய்துள்ளது. முதல் பாகத்தை போலவே, ஜேம்ஸ் கேம்ரூன் இப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து, படத்தொகுப்பும் செய்துள்ளார். எழுத்து, தயாரிப்பு பலரின் பங்களிப்புடன் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஆங்கிலம், இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.

கிராபிக்ஸ் மற்றும் உலகத்தரமான உருவாக்கம் குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பினரையும் திரையரங்கில் குவிய செய்துள்ளது. தற்போது விடுமுறை தினங்கள் நெருங்கி வருவதால், படத்தின் வசூல் எதிர்பார்ப்புகள் அனைத்தையும் தாண்டி பெரும் வெற்றியும் எனவும் கூறப்படுகிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.