`எங்க ஏரியால டிஜிட்டல் வெடிகுண்டு இருக்கு…’ – அலறிய பொதுமக்களால் அதிர்ந்த தலைநகர்!

இன்றைய அதிவேக உலகிற்கு காரணம் டிஜிட்டல் சாதனங்களின் அசுர வளர்ச்சிதான். உணவு தொடங்கி கல்வி வரை அத்தியாவசிய தேவைகள்கூட இன்று டிஜிட்டலாகிவிட்டது. இப்படியான சூழலில்தான், டிஜிட்டல் சாதனமொன்றின் காரணமாக டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் உள்ள பஸ்சிம் விஹார் பகுதியில், சந்தேகத்திற்கிடமான பொருள் ஒன்றை காவல்துறையினர் இன்று மீட்டுள்ளனர். நட்சத்திர ஹோட்டலொன்றின் அருகே இதைக் கண்ட பொதுமக்கள், அந்த பொருள் வெடிகுண்டாக இருக்கலாமென்று சந்தேகித்து  காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். அப்பகுதி பல பள்ளிகளை கொண்ட பகுதியென்பதால், வெடிகுண்டு தகவலால் அங்கு பரபரப்பு நிலவியது. தொடர்ந்து விரைந்து அங்கு சென்ற காவல்துறையினர், அது ஒரு வைஃபை ரூட்டராகவோ அல்லது டிஜிட்டல் பூட்டாகவோ இருக்கலாம் என தெரிவித்துள்ளனர். 
image
பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அவர்கள் சந்தேகப்படும்படியான அந்தப் பொருளைக் கைப்பற்றி அது  வெடிகுண்டாக இருக்குமா அல்லது வேறு ஏதேனும் பொருளா என்பது குறித்து விசாரணை நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
– ஷர்நிதா

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.