விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படம் 22 ஆம் தேதி வெளிவருகிறது. இந்த படத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்திருக்கும் அவர், படம் ரிலீஸையொட்டி புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுவருகிறார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நடிகர் விஷால், ” தமிழ்நாட்டில் 2 லட்சத்து 30 ஆயிரம் போலீஸ் கான்ஸ்டபிள்கள் இருக்கிறார்கள். அவர்களின் நடத்தைதான் போலீசின் கவுரவத்தை தீர்மானிக்கிறது. போலீஸ் உயர் அதிகாரிகளின் சாகசங்களை பற்றித்தான் நிறைய படங்கள் வந்திருக்கிறது. கான்ஸ்டபிள்களின் வாழ்க்கை, அவர்களது பணிச்சூழல், அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் பற்றி வந்ததில்லை. இந்த படம் அவர்களை பற்றியது என்பதால் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
இந்த படத்தை தமிழ் நாட்டில் உள்ள போலீஸ் கான்ஸ்டபிள்களுக்கு காட்ட ஏற்பாடு செய்து வருகிறேன். பல நகரங்களில் அதற்கான அனுமதி கிடைத்திருக்கிறது. இது நான் நடித்த படங்களிலேயெ பெரிய பட்ஜெட்டில் தயாராகி இருக்கிறது. படத்தின் கடைசி 40 நிமிட காட்சிகள் ஒரு கட்டிமுடிக்கப்படாத கட்டிடத்தில் நடக்கிறது. இதற்காக நான்கு மாதங்கள் வரை அங்கு சண்டை காட்சியை எடுத்தோம். பீட்டர் ஹெய்ன் மாஸ்டருக்கு இந்த படத்தின் மூலம் மீண்டும் ஒரு தேசிய விருது கிடைக்கும். வெறும் லத்தியை மட்டும் வைத்துக் கொண்டு எதிரிகளை சமாளிப்பதுதான் இந்த சண்டை காட்சியின் கான்செப்ட்.
எல்லா படங்களும் பைரசி பிரச்சினையை சந்திப்பது போன்று இந்த படமும் சந்திக்கும். ஆனால் அரசு நினைத்தால் பைரசியை ஒரே நாளில் ஒழித்து விட முடியும். பைரசி செய்பவர்களின் வீட்டு முகவரி, அவர்களது குடும்ப போட்டோ உள்ளிட்ட புள்ளி விபரங்கள் என்னிடம் இருக்கிறது. அரசு கேட்டால் அதைத் தர தயார். ஆபாச தளங்களை தடை செய்ய முடியும்போது பைரசி தளங்களை தடை செய்ய முடியாதா?. நான் அமைத்த குழு இன்னும் பைரசிக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கிறது.
விலங்குகளை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. ஆனால் அதற்கு முன் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக துப்பறிவாளன் 2 படத்தை இயக்க வேண்டியதாகிவிட்டது. அடுத்து எனது கனவு படத்தை இயக்குவேன். ஒரு ரசிகனாக விஜய்யை எப்படி பார்த்து ரசிக்கிறேனோ அதற்கு ஏற்ற மாதிரி ஒரு கதை அவருக்காக எழுதி வருகிறேன். அதையும் இயக்குவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.