தெலுங்கு பட ரீமேக் விவகாரம்: நடிகர் விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கு ரத்து

‘உப்பெனா’ என்ற தெலுங்கு படத்தை தமிழில் ரீமேக் உரிமையை தான் வாங்கவில்லை என  நடிகர் விஜய் சேதுபதி தரப்பு விளக்கத்தை ஏற்று, அவருக்கு எதிரான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

தெலுங்கு நடிகர் வைஷ்ணவ் தேஜ், கீர்த்தி ஷெட்டி நடிப்பில் தெலுங்கில் உருவான ‘உப்பெனா’ படத்தை, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, இயக்குனர் புஜ்ஜி பாபு சனா படத்தை இயக்கி இருந்தார். இந்த படத்தை தமிழில் மறு உருவாக்கம் செய்யும் ரீமேக் உரிமையை, அந்த படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதியின், விஜய் சேதுபதி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் வாங்கியதாக தகவல் வெளியானது.
 
image

இந்நிலையில்  ‘உலகமகன்’ என்ற தனது கதையை திருடி, தெலுங்கில் உப்பெனா என்ற படமாக உருவாகியுள்ளதாகவும், படத்தின் மூலம் ஈட்டிய வருமானத்தில் 50 சதவீதத்தை தனக்கு கொடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் அதன் ரீமேக்கை தமிழில் விஜய் சேதுபதி பட நிறுவனம்  தயாரிக்க தடை விதிக்க வேண்டும் எனவும் கோரி  தேனியை சேர்ந்த உதவி இயக்குனர் டல்ஹவுசி பிரபு என்பவர்  சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

image

இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு  விசாரணைக்கு வந்தபோது, விஜய் சேதுபதி தரப்பில் உப்பென்னா திரைப்படத்தை  தமிழில் ரீமேக் செய்யும் உரிமையை தான் வாங்கவில்லை என்றும், அதற்கான எந்த ஆதாரங்களையும் மனுதாரர் தெரிவிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, விஜய் சேதுபதிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ஆகியோருக்கு எதிரான வழக்கை நாளை (டிசம்பர் 20) தள்ளி வைத்துள்ளார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.