அமராவதி ஆற்றில் 10அடி நீள ராட்சத முதலை

தாராபுரம்: தாராபுரம் அருகே அமராவதி ஆற்று தடுப்பணையில் முதலை காணப்பட்டதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் இருந்து அலங்கியம் வழியாக பழனி செல்லும் சாலையில் உள்ளது சீத்தக்காடு. இங்குள்ள அமராவதி ஆற்றின் கரையோர பகுதியில் இப்பகுதியில் பழமையான சங்கிலி கருப்பன் சுவாமி கோயில் அமைந்துள்ளதால் வாரம் முழுவதும் பக்தர்களின் வருகை இருந்து கொண்டே இருக்கும்.

இது தவிர இங்குள்ள அமராவதி ஆற்றின் இடையே ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட கற்களால் ஆன பழமையான தடுப்பணை உள்ளதால் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் இந்த அணையின் கரையில் நடந்து சென்று அக்கரை பகுதியில் விவசாய பணிகளை கவனிப்பது வழக்கம். இந்நிலையில் அமராவதி அணையில் இருந்து தப்பி வந்த சுமார் 4 முதலைகள் பல வருடங்களாக இப்பகுதியில் நடமாடி அவ்வப்போது பொதுமக்களுக்கு காட்சி கொடுத்து பீதியை ஏற்படுத்தி வருகின்றன. கடந்த மூன்று வருடங்களுக்கு முன் 4 முதலையில் 2 முதலைகளை வனத்துறையினர் பிடித்து சென்றுவிட்டனர்.

2 முதலைகள் மட்டும் பிடிபடாமல் போக்குகாட்டி வந்தது. இந்நிலையில் நேற்று தடுப்பணையின் நடுவே உள்ள பாறை மீது சுமார் 10 அடி நீள முதலை ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது. இதனைப் பார்த்த ஆற்றில் குளிக்க வந்த பொதுமக்களும், விவசாயக் கூலித் தொழிலாளர்களும், மீன் பிடிக்க காத்திருந்த மீனவர்களும் ஆற்றைக் கடந்து செல்ல அச்சமடைந்து கரையிலேயே காத்திருந்தனர். பொது மக்களின் சத்தத்தை கேட்டு பாறையில் படுத்து இருந்த முதலை மீண்டும் தண்ணீருக்குள் தஞ்சமடைந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் வயல்வெளி பகுதியில் சிக்கிய முதலை ஒன்றை அப்பகுதியை சேர்ந்த சிலர் பிடித்து அதன் இறைச்சியை ஆண்மை குறைவுக்கு, தாது விருத்திக்கு சிறந்த மருந்து என்று சில கிராமங்களில் கிலோ 700 ரூபாய்க்கு விற்பனை செய்ததாக பரபரப்பு தகவல்கள் பரவியது. இந்நிலையில் அதே பகுதியில் மீண்டும் காட்சி தந்த முதலையை நேரில் பார்த்து பொதுமக்கள் பீதியில் உள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.