பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டம்: அமைச்சர் குழுவுடன் கிராம மக்கள் பேச்சுவார்த்தை

சென்னை: பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக 13 கிராம மக்களின் பிரதிநிதிகளுடன் தமிழக அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் சென்னை தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நெருக்கடி மற்றும் விமானங்களை கையாளும் திறன் குறித்த பிரச்சினை இருப்பதால், சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்க வேண்டியது அவசியமாகிறது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க முடிவெடுக்கப்பட்டு, அதற்கான நிலம் கையகப்படுத்துவது குறித்தும் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பரந்தூர் பகுதியில் நிலம் கையகப்படுத்துவதற்கு 13 கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆய்வு செய்த அமைச்சர்கள், நிலத்துக்கு உரிய சந்தைவிலை, வீட்டில் ஒருவருக்கு வேலை, மாற்று இடம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்தனர்.

நிலம் கையகப்படுத்துதல்: அத்துடன், அமைச்சர்களே நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, நிலம் கையகப்படுத்துவதற்கான அடிப்படை பணிகளை, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அலுவலகம் மூலம் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

மறுபுறம், 145 நாட்களாக நடைபெற்ற பொதுமக்கள் போராட்டத்தின் அடுத்த கட்டமாக, 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கையில் கருப்புக் கொடி ஏந்தி ஏகனாபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நேற்று (டிச.19) பேரணி நடத்தினர்.

இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் இன்று பரந்தூர் விமான நிலையம் தொடர்பாக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்தனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில், இன்று 13 கிராம மக்களின் பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.