போதை வணிகம்; அர்த்த சாஸ்திரம் முதல்… அதானி துறைமுகம் வரை: சு.வெங்கடேசன் பேச்சு!

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில், விதி 193 இன் படி மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் சி.பி.எம் சார்பில் மதுரை எம்.பி சு. வெங்கடேசன் பேசியதாவது: “போதைப் பழக்கத்திற்கு அடிமையாதல், அந்த பிரச்சனையை அரசு கைகொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமான இந்த விவாதத்தில் மிக முக்கியமாக போதையினுடைய பாதிப்புகள் ஆபத்துகளை பற்றி பலரும் இங்கே எடுத்து வைத்திருக்கிறார்கள்.

போதை மறுவாழ்வு என்பது எவ்வளவு கடினமான ஒரு நிலை, குறிப்பாக புதிய தலைமுறையினர் பள்ளி குழந்தைகளை குறி வைத்து நடக்கிற இந்த வணிகம், அது ஏற்படுத்துகிற பாதிப்புகள் இன்னும் சரியாக சொல்லப்போனால் பள்ளிக்கூடங்களில் கல்வி நிலையங்களில் மன அழுத்தம் நிறைந்த மாணவர்களை நோக்கி இவர்கள் எப்படி காய்களை நகர்த்துகிறார்கள்.

முதலில் அந்த மாணவனை தனது வலையில் விழ வைத்து பிறகு அந்த மாணவன் மூலம் அங்கே ஒரு பெரிய நெட்வொர்க் பின்னப்படுவது பற்றி நிறைய ஆய்வுகளும் குறிப்புகளும் வந்திருக்கிறது. இந்த வகைகளில் இதில் இரண்டு பிரச்சினைகள் பற்றி பேசுகிறார்கள் அதில் ஒன்று பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளி அது ஏற்படுத்துகிற மன‌ இடைவெளி அது மாணவர்களை போதைப் பழக்கத்திற்கு அடிமையாவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.

ஒரு கோணம் பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான உறவு சார்ந்தது. மற்றொரு கோணம் அரசு அதிகாரத்திற்கும் போதை வணிகத்துக்கும் இருக்கிற உறவு சார்ந்தது.

புதிய தலைமுறை அரசியல் மாயப் படுவதை தடுப்பதில் திசை திருப்புவதில் போதைப் பொருட்களுக்கு மிக முக்கியமான பங்கு இருக்கிறது. மக்களை மயங்கி விழ வைக்கிற எந்த ஒன்றும் அரசு அதிகாரத்தினுடைய ஆசி பெற்றதாகத்தான் இருக்க முடியும். இதை நான் சொல்லவில்லை அர்த்த சாஸ்திரம் இதைப் பற்றி மிக விரிவாக பேசுகிறது.

எப்படி எல்லாம் ஆட்சியை நடத்துகிறவர்கள் மக்களை திசை திருப்புகிற, மயங்கி விழச் செய்கிற போதைப் பழக்க பிரச்சனையை கைக்கொள்ள வேண்டும். பெரும் கூட்டத்துக்குள் ஒரு பாம்பு நுழைவதைப் போல மக்கள் திரளுக்குள் இவற்றை எப்படி பயண்படுத்த வேண்டும் என்று அர்த்த சாஸ்திரம் பேசுகிறது.

அந்தவகையில் அரசு அதிகாரத்திற்கும் போதை வணிகத்திற்குமான உறவு பற்றி இந்த அவை மிக அழுத்தமாக கவனம் செலுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இரண்டு முக்கியமான முன்னுதாரணங்களை இங்கே நான் சொல்ல வேண்டும் என்று நினைக்கிறேன்.

போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்துவதில் ஒரு சிறந்த முன்னுதாரணம் தமிழகத்தில் இருந்த முன்னுதாரணம். தென் தமிழ்நாட்டில் சவுத் ஜோன் ஐஜி இன்றைக்கு எடுத்து இருக்கிற நடவடிக்கை என்பது கடந்த 9 மாதங்களில் என்டிபிஎஸ்(NDPS) வழக்கு 2000 வழக்குகளில் குற்ற அறிக்கையை நீதிமன்றத்திற்கு தாக்கல் செய்து ஒரு சாதனையை புரிந்து இருக்கிறார். இதற்காக உயர்நீதிமன்ற மதுரை கிளை அவரை பாராட்டி இருக்கிறது.

அதேபோல போதைப் பொருள் தடுப்பு பிரச்சினைகளில் சி ஆர் பி சி (CRPC) 102 இன் 1873 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 1376 நபர்களுக்கு நன்னடத்தைக்கான பிணை பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. என் டி பி எஸ் (NDPS) 1985 ன்படி 69 பேருடைய சொத்துக்களை முடக்கப்பட்டுள்ளது. இதனை தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் ஐபிஎஸ் அவர்கள் நடவடிக்கை எடுத்திருக்கிறார். உயர் நீதிமன்றம் பாராட்டியிருக்கிற அவருக்கு நமது பாராட்டுகளும்.

இரண்டாவது மிக மோசமான முன்னுதாரணம் அதானியினுடைய துறைமுகம் சார்ந்தது. குஜராத்தில் உள்ள முந்தரா துறைமுகத்தில் 2023 ஜூலை மாதம் 350 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள் பிடிபட்டுள்ளது. 2021 செப்டம்பர் மாதத்தில் 21 000 கோடி மதிப்பிலான 3000 கிலோ ஹெராயின் மூன்று கண்டெய்னர்களில் வந்து இறங்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இது பற்றி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்று மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறது. ஊடகங்களும் தொடர்ந்து எழுப்புகின்றன. ஆனால் தேசிய புலனாய்வு முகமையோ, சுங்கத்துறையோ இது பற்றி வாய்திறக்க மறுப்பது ஏன்?” இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.