வேலூர் அருகே உள்ள பொய்கை மாட்டுச்சந்தையில் குவிந்த 2 ஆயிரம் கால்நடைகள்: ரூ.1 கோடியை எட்டிய வர்த்தகம்

வேலூர்: வேலூர் அருகே உள்ள பொய்கை மாட்டுச் சந்தையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகள் மற்றும் கால்நடைகள் குவிந்த நிலையில் வர்த்தகமும் ரூ.1 கோடியை எட்டியதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். தமிழகத்தின் முக்கிய கால்நடை வாரச்சந்தைகளில் பொய்கை மாட்டுச்சந்தை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் நடைபெறும் இந்த சந்தைக்கு உள்ளூர் மட்டுமின்றி திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் மற்றும் அண்டை மாநிலமான ஆந்திர மாநிலம் வி.கோட்டா, குப்பம், பலமநேர், புங்கனூர் என பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் இருந்தும் கால்நடைகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன.

இதனால் சீசன் நேரங்களில் இந்த சந்தையில் கோடிக்கணக்கில் விற்பனை நடைபெறும். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக டல்லடித்த பொய்கை மாட்டுச்சந்தையின் நிலவரம் கடந்த 2 வாரங்களில் சுமாரான நிலையை எட்டியுள்ளது. இன்றும் கறவை மாடுகள், ஜெசி கலப்பின பசுக்கள், காளைகள், உழவு மாடுகள், எருமைகள் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாடுகளும், 500க்கும் மேற்பட்ட ஆடுகளும் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

மேலும் கோழிகளும் அதிகளவில் விற்பனைக்காக குவிந்து பொய்கை மாட்டுச்சந்தை களைக்கட்டியது. இதன் காரணமாக இன்று ஒட்டுமொத்தமாக பொய்கை மாட்டுச்சந்தையில் விற்பனை ஏறத்தாழ ரூ.1 கோடியை எட்டியதாக விவசாயிகளும், கால்நடை வியாபாரிகளும் மகிழ்ச்சி தெரிவித்தனர். இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில்,

‘பொய்கை மாட்டுச்சந்தையில் இன்று 1500க்கும் மேற்பட்ட மாடுகள், 500க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழிகள் விற்பனைக்கு வந்தன. வர்த்தகத்தை பொறுத்தவரை சுமாரான நிலைதான். ஆனாலும் மோசம் என்று கூற முடியாது. கறவை மாடுகள் அதிகளவில் விற்பனை நடந்துள்ளது. இதற்கு தொடர்ந்து பெய்து வரும் மழையால் கால்நடைகளுக்கான தீவனம் தாராளமாக கிடைக்கும்’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.