தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பூவத்தூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தனியார் பள்ளி மாணவர்கள் பேருந்துகளில் செல்வதை அரசு பள்ளி மாணவர்கள் ஏக்கத்துடன் பார்த்து வந்துள்ளனர். இதனையடுத்து முன்னாள் மாணவர்கள், ஊர் மக்கள் மற்றும் பூவத்தூர் கல்வி வளர்ச்சி குழுமம் இணைந்து அரசு பள்ளிக்கு 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேருந்தை வாங்கி கொடுத்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய கிராம மக்கள் அந்த பகுதியில் உரிய பேருந்து வசதிகள் இல்லாததால் மாணவர்கள் பல கிலோமீட்டர் தூரம் நடந்து பள்ளிக்கு செல்ல வேண்டிய சூழல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் பெற்றோர்கள் பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப தயங்குவதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அரசு பள்ளிக்கு பேருந்து வாங்கி கொடுத்த கிராம மக்களை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.