நீலகிரி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் ஆண்டுதோறும் கேரட் சாகுபடி செய்யபட்டு வருகிறது. இங்கு விளையும் கேரட்டு சுவை அதிமாக இருப்பதாலும் ஒரு வாரத்திற்கு மேல் வைத்து விற்பனை செய்ய முடியும் என்பதாலும் நாள்தோறும் தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களுக்கும் டன் கணக்கில் ஏற்றுமதி செய்யபடுகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் விளையும் கேரட் மேட்டுபாளையம் கொண்டு சென்று விற்பனை செய்யபட்டு வரும் நிலையில் கடந்த மூன்று மாதங்களாக கிலோவிற்கு 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை என தரத்திற்கு ஏற்ப விற்பனையாகி வந்தது.
இதனால் கேரட் விவசாயிகள் நல்ல லாபம் பெற்று வந்தனர். இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக கர்நாடக மாநிலம் மானூர், ஆசன் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கேரட் வருகையால் நீலகிரி மாவட்ட கேரட்டிற்கு கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனால் 50 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வந்த ஒரு கிலோ கேரட் 15 ரூபாயாக விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. குறைந்த பட்சமாக ஒரு கிலோ 15 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்பனையாவதால் கேரட் விவசாயிகள் முதலீடு செய்த காசு கூட பெற முடியாமல் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
ஒரு கிலோ கேரட்டை விலைவித்து அறுவடை செய்ய 15 ரூபாய்க்கு மேல் செலவு ஆவதால் தற்போதைய விலை அறுவடை செய்யும் ஆள் கூலி, வாகன வாடகைக்கு கூட போதாத நிலை இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கர்நாடக மாநில கேரட் வருகையால் நீலகிரி மாவட்ட கேரட்டுக்கு கடும் விலை வீழ்ச்சி. கிலோ 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை சரிந்ததால் கேரட் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.