'நவீன இந்தியாவின் தந்தை பிரதமர் மோடி' – அம்ருதா பட்னவிஸ் புகழாரம்!

மகாத்மா காந்தி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் இந்தியாவின் தேசத் தந்தைகள் என மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிசின் மனையி அம்ருதா பட்னவிஸ் தெரிவித்து உள்ளார்.

மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா (அதிருப்தி அணி) – பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் துணை முதலமைச்சராக இருப்பவர், பாஜகவின், தேவேந்திர பட்னவிஸ்.

இந்நிலையில், நாக்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட, பாஜக மூத்தத் தலைவரும், மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சருமான தேவேந்திர பட்னவிஸ் மனைவி அம்ருதா பட்னவிஸ் கூறியதாவது:

நாட்டில் இரண்டு தேசப்பிதாக்கள் உள்ளனர். ஒருவர் இந்தியாவின் முந்தைய காலத்தின் தந்தை.

மற்றொருவர், நவீன இந்தியாவின் தேசத் தந்தை. முந்தைய காலத்தின் தேசத் தந்தை மகாத்மா காந்தி. நவீன இந்தியாவின் தேசத் தந்தை பிரதமர் நரேந்திர மோடி.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான யசோமதி தாக்கூர் கூறுகையில், ” பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள் காந்தியை மீண்டும் மீண்டும் கொல்ல முயற்சிக்கின்றனர். பொய்களை திரும்ப திரும்ப சொல்வதன் மூலம் காந்தி போன்ற பெரியவர்களை சிறுமைப்படுத்துவதன் மூலம் வரலாற்றை மாற்றுவதில் அவர்கள் தொடர்ந்து ஈடுபடுகின்றனர்,” என குற்றம் சாட்டினார்.

சமூகத்தின் முன்னேற்றத்திற்காக இடைவிடாமல் உழைக்க நம்மைத் தூண்டும் நமது நாட்டின் தந்தை

நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என, கடந்த 2019 ஆம் ஆண்டில், அம்ருதா பட்னாவிஸ், சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.