5 மாத பெண் குழந்தையை விற்கமுயன்ற தாய், புரோக்கர்கள் – சுற்றி வளைத்துக் கைதுசெய்த போலீஸார்

தூத்துக்குடியில் ஒரு கும்பல் குழந்தை விற்பனையில் ஈடுபடவுள்ளதாக தென்பாகம் காவல் நிலைய போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.பி பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், தென்பாகம் காவல் நிலைய தனிப்படை போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 5 மாத பெண் குழந்தையை ஒரு கும்பல் விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதை அறிந்த சீருடை அணியாத போலீஸார், அந்தக் குழந்தையை வாங்குவது போல புரோக்கர்களிடம் நைசாக பேசியுள்ளனர்.

சூரியம்மா, அய்யம்மாள், மாரீஸ்வரி, மாரியப்பன்

இதில் ரூ.2 லட்சத்தில் தொடங்கி ரூ.5 லட்சத்தில் குழந்தையை விற்க பேரம் பேசி முடிக்கப்பட்டது. தொடர்ந்து குழந்தையை காட்டுவதற்காக அந்த கும்பல் குழந்தையுடன் தூத்துக்குடி- பாளையங்கோட்டை சாலையில் உள்ள வேம்படி இசக்கியம்மன் கோயில் அருகே வந்துள்ளனர். இதனையடுத்து  அக்கோயில் எதிரே உள்ள பூங்காவின் அருகில் பதுங்கியிருந்த தனிப்படை போலீஸார்,  குழந்தையுடன் அந்த கும்பல் வந்திருப்பதை உறுதி செய்த பிறகு  அவர்களை மடக்கி பிடித்தனர்.

அந்த குழந்தையின் தாயான கோவில்பட்டியைச்  மாரீஸ்வரி, அவரது தாய் அய்யம்மாள்  மற்றும் புரோக்கர்களான தூத்துக்குடியைச் சேர்ந்த  மாரியப்பன், சூரியம்மா என்ற சூரம்மா ஆகிய 4 பேரையும் கைதுசெய்தனர். அவர்களிடம் இருந்து 5 மாத பெண் குழந்தையை மீட்ட போலீஸார், தூத்துக்குடியில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.  பெண் குழந்தையை விற்கமுயன்ற கும்பல் சிக்கியது குறித்து மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணனிடம் பேசினோம், “ 5 மாத பெண் குழந்தை விற்கப்பட உள்ளதாக  எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தூத்துக்குடி டவுன் டி.எ.ஸ்பி சத்தியராஜின் மேற்பார்வையில், தென்பாகம் காவல் ஆய்வாளர் ராஜாராமின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

தென்பாகம் காவல் நிலையம்

குழந்தை விற்பனை செய்யும் புரோக்கர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தையை  வாங்குவது போல போலீஸாரே சந்தேகம் ஏற்படாத வகையில் பேரம் பேசினார்கள். குழந்தையைப் பார்க்க வேண்டும் எனச் சொல்லப்பட்ட நிலையில்,  குழந்தையுடன் வந்த அந்த கும்பல் பிடிபட்டது.  அந்த பெண் குழந்தையின் தாய் மாரீஸ்வரிக்கு ஏற்கெனவே திருமணமாகி கணவர் பிரிந்து விட்டார்.

இரண்டாவதாக  கலைவாணர்  என்பவரை திருமணம் செய்துள்ளார்.  இந்தக் குழந்தை பிறந்த சில நாள்களில் அவரும் பிரிந்து சென்றுவிட்டாராம். மாரீஸ்வரிக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் இந்த குழந்தை குறைப்பிரசவத்தில் 8-வது மாதத்திலேயே பிறந்துள்ளது. மருத்துவமனையில் இரண்டு மாதம் வரை வைத்து பராமரித்த பின்பு வீட்டுக்கு குழந்தையை  வீட்டுக்கு கொண்டு வந்துள்ளார். இரண்டாவது கணவரும் தன்னை பிரிந்து சென்று விட்டதால் மூன்றாவதாக திருமணம் செய்யும் திட்டத்தில் இருந்துள்ளனர் மாரீஸ்வரி குடும்பத்தினர். அதனால், தனது தாய் மற்றும் புரோக்கர்களின் உதவியுடன் பணத்துக்காக குழந்தையை விற்பனை செய்ய மாரீஸ்வரி முயன்றுள்ளார்.

எஸ்.பி – பாலாஜி சரவணன்

இந்த சம்பவத்தில் ஈரோடு பகுதியை சேர்ந்த மேலும் 2 புரோக்கர்களுக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும், இந்த கும்பல் வேறு ஏதாவது குழந்தைகளை இதே விற்பனை செய்துள்ளனரா என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்” என்றார். குழந்தை விற்பனை முயற்சியில் ஈடுபட்ட கும்பலை  கைதுசெய்து குழந்தையை மீட்ட தனிப்படை போலீஸாரை எஸ்.பி பாலாஜி சரவணன் பாராட்டினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.