சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சீதாம்மாள் 1-வது தெருவில் அன்னை ஆதரவற்ற முதியோர் இல்லம் மற்றும் பிருந்தாவனம் ஆதரவற்றவர்களுக்கான மீட்பு மையம் இயங்கி வருகிறது. இந்த முதியோர் இல்லத்தில் ஆறு முதியவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த முதியோர் இல்லத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயந்தி என்பவர் கடந்த பத்து மாதங்களாக பணிபுரிந்து வருகிறார். கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இவர், முதியோர் இல்லத்தில் தங்கி சமையல் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், ஜெயந்தி நேற்று மாலை மூன்றாவது மாடியில் உள்ள சமையலறைக்கு காபி போட சென்றபோது எதிர்பாராதவிதமாக அவருடைய சேலையில் தீப்பிடித்தது. அதை அணைப்பதற்கு ஜெயந்தி முயற்சி செய்தார். ஆனால் அதற்குள் தீ அவர் உடல் முழுவதும் பரவியது.
இதனால் வலி தாங்க முடியாமல் அங்கும் இங்குமாக ஓடிய ஜெயந்தி, ஒருகட்டத்தில் மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதைப்பார்த்த அங்கிலிருந்தவர்கள் ஜெயந்தியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு, ஜெயந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த தேனாம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.