கரோனா பரவல் | “அச்சம் வேண்டாம்… அரசு தயார் நிலையில் உள்ளது” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், மக்களை பாதுகாக்க அரசு தயார் நிலையில் உள்ளது என்றும் தமிழத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இது குறித்து அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு தொடர்பாக இன்று (புதன்கிழமை) தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தற்போதைய கோவிட் நிலவரம் பற்றி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் எடுத்துரைத்தார்.

சமீபத்தில் அமெரிக்கா, ஐரோப்பா நாடுகளான ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஆசிய நாடுகளான தென்கொரியா, ஜப்பான், சீனா போன்ற நாடுகளில் கோவிட் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஒன்றிய அரசின் சுகாதாரச் செயலாளர் சுற்றறிக்கையின்படி, கோவிட் தொற்று எண்ணிக்கை கண்காணிக்கவும், தொற்று உள்ளவர்களுக்கு முழு மரபணு வரிசைபடுத்துதல் பரிசோதனை (Whole Genomic Sequencing) செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் உள்ள கொரோனா தொற்று XBB வகையாகும். இது BA-2 உருமாறிய கொரோனாவின் உள்வகையாகும். சில ஆசிய நாடுகளில் தற்போது பரவி வரும் BF-7 வகையான கொரோனா தொற்று BA-5-ன் உள்வகையாகும். இத்தகைய BA-5 தொற்று தமிழத்தில் ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிகமாக கண்டறியப்பட்ட இந்த தொற்றின் வகை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது .

தற்போது தமிழகத்தில் கோவிட் தொற்று குறைந்துள்ள நிலையிலும் அரசு மருத்துவமனைகளில் கோவிட் சிகிச்சைக்கு தேவையான படுக்கை வசதிகள், மருந்துகள், பரிசோதனை வசதிகள் மற்றும் ஆக்ஸிஜன் போதுமான அளவில் இருப்பதாகவும், தேவை ஏற்பட்டால் மேற்கண்ட வசதிகள் கூடுதலாக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டுதல்படி கோவிட் பரிசோதனை செய்யவும், கோவிட் தொற்று கண்டவர்களின் மாதிரிகளை முழுமரபணு வரிசைபடுத்துதல் பரிசோதனை செய்யவும், நோய் பரவலை தொடர்ந்து கண்காணிக்கவும் மேலும் இன்புளூயன்சா மாதிரி காய்ச்சல் மற்றும் அதிக நுரையீரல் தொற்று (ILI & SARI) ஆகிய நோய்களை தொடர்ந்து கண்காணிக்கவும் மருத்துவத்துறை அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளனர்,

கொரோனா மேலாண்மைக்கான நிலையான வழிகாட்டுதல்படி, குறிப்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் உள்அரங்குகளில், தனிமனித இடைவெளியினை கடைபிடிப்பது, நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை அணுகி மருத்துவர்களின் ஆலோசனையின்படி கோவிட் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெறவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

சர்வதேச விமான நிலையங்களில், வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் எவருக்கேனும் கொரோனா தொற்று அறிகுறிகளான காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் இருந்தால் அவர்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி (SOP) கோவிட் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிப்பதை உறுதி செய்ய அவர் அறிவுறுத்தினார்.

பொதுமக்கள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், மக்களை பாதுகாக்க அரசு தயார் நிலையில் உள்ளது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, காவல் துறை தலைமை இயக்குநர் செ.சைலேந்திர பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ப. செந்தில்குமார், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் ஷில்பா பிரபாகர் சதீஷ், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர் எஸ். உமா, தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்குநர் டி.எஸ். செல்வவிநாயகம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் வி.பி. ஹரி சுந்தரி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.