சென்னை அருகே ஆறாம் வகுப்பு மாணவன் லாரி சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை செம்மஞ்சேரி பொன்னியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் ஹரிஹரன்(11) மாமல்லபுரம் சாலை நாவலூரில் உள்ள அரசு பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல பள்ளிக்கு செல்வதற்காக, அரசு பேருந்தில் நாவலூர் வந்த ஹரிஹரன் சர்வீஸ் சாலையில் பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தான்.
அப்பொழுது அவ்வழியாக வேகமாக வந்த தண்ணீர் லாரி ஹரிஹரன் மீது மோதியதில், லாரியின் முன் சக்கரத்தில் சிக்கி மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளான். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் லாரி ஓட்டுனரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.