தென் தமிழகத்தில் விஎச்பி யாத்திரைக்கு அனுமதி கோரிய மனுவை விசாரிக்க நீதிபதி மறுப்பு

மதுரை: தென் தமிழகத்தில் விஎச்பி சார்பில் வாகன யாத்திரை நடத்த அனுமதி கோரி தாக்கலான மனுவை விசாரிக்க மறுத்த நீதிபதி, விசாரணையை வேறு நீதிபதிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

தென் தமிழக விஷ்வ ஹிந்து பரிஷத் இணை செயலாளர் ஏ.பாரத் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், ”தமிழக மக்கள் மத்தியில் வேண்டுதல் மற்றும் விரதத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜன.1 முதல் 17 ஆம் தேதி வரை விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் வாகன யாத்திரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாகன யாத்திரை திருச்சி மலைக்கோட்டையில் தொடங்கி தென் மாவட்டங்களுக்கு சென்று ஜன. 17-ல் திருச்சி விராலிமலையில் நிறைவடைகிறது. யாத்திரை வாகனத்தில் முருகன் சிலையும், விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் மற்றும் துறவிகள் இருப்பர். யாத்திரைக்கு அனுமதி கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் யாத்திரை செல்லும் மாவட்ட ஆட்சியர்களுக்கு மனு அளிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை அனுமதி வழங்கவில்லை. எனவே ஜன. 1 முதல் 17 ஆம் தேதி வரை விஷ்வ ஹிந்து பரிஷத் வாகன யாத்திரைக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.” இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி, இந்த மனு, தான் விசாரிக்கும் வழக்குகளின் வகையை சார்ந்தது இல்லை என்று கூறி வேறு நீதிபதி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.