போலீசார் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிடும் அரசின் முடிவுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

சிறு தவறுகளுக்காக காவல் துறையினர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை கைவிடும் தமிழக அரசின் அரசாணைக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கோவையைச் சேர்ந்த வழக்கறிஞரும், மனித உரிமை ஆர்வலருமான சாரதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், லாக்கப் மரணம் உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் காவல் துறையினர் ஈடுபடுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறியுள்ளார்.

இந்நிலையில், சிறு தவறுகளுக்காக காவல் துறையினர் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை கைவிடப்படும் என தமிழக அரசு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை வெளியிட்டு உள்ளதாக கூறியுள்ளார்.

அவ்வாறு காவல் துறையினர் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்படும் பட்சத்தில் பொது மக்களுக்கு ஆபத்தாகும் எனவும் மனித உரிமை மீறலில் ஈடுப்பட்ட காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்திருந்தார். எனவே காவல் துறையினர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை கைவிடும் அரசின் முடிவுக்கும், அரசாணைக்கும் தடை விதிக்க வேண்டுமென மனுவில் கோரி இருந்தார்.

இந்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் வந்த போது, பணி தொடர்பான விவகாரங்களில் எவ்வாறு பொது நல வழக்கு தொடர முடியும் என கேள்வி எழுப்பினர். மேலும், விளம்பர நோக்கத்திற்காக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள் விசாரணைக்கு உகந்தது அல்ல என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.