பையனை பள்ளிக்கு அனுப்புங்க… – மாணவரின் வீட்டு முன் ஆசிரியர் மறியல்

ஹைதராபாத்: வறுமை காரணமாக 10-ம் வகுப்பு மாணவனை பள்ளிக்கு அனுப்பாததால், அவர்களின் வீட்டுக்கே சென்று தெலங்கானா ஆசிரியர் ஒருவர் மறியல் செய்து பெற்றோரின் சம்மதத்தை பெற்றார்.

தெலங்கானா மாநிலம், சித்திபேட்டை மாவட்டம், பெஜ்ஜிங்கி அரசு உயர்நிலைப்பள்ளியில் மொத்தம் 64 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இதில், வரும் மார்ச் மாதத்தில் 6 மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ளனர். இவர்களில் நவீன் என்பவர் மட்டும் கடந்த 10 நாட்களாக பள்ளிக்கு வரவில்லை.

தலைமையாசிரியர் உத்தரவின் பேரில், ஆங்கில ஆசிரியர் பிரவீன் குமார், நவீன் வீட்டுக்கு சென்று விசாரித்தார். வறுமை காரணமாக நவீனை பள்ளிக்கு அனுப்ப அவனது பெற்றோர் மறுத்துவிட்டனர். இதனால், மாணவரின் வீட்டு முன் அமர்ந்து ஆசிரியர் பிரவீன் மறியலில் ஈடுபட்டார். உங்களின் வறுமை நிரந்தரமாக நீங்கவே, நான் உங்களை வற்புறுத்துகிறேன் என கூறி கல்வியின் முக்கியத்துவத்தையும் புரிய வைத்தார்.

அதன் பிறகு நவீனை பள்ளிக்கு அனுப்ப அவனது பெற்றோர் ஒப்புக் கொண்டனர். நவீனை பள்ளிக்கு அழைத்துவந்த பிரவீன் குமாரை, தலைமை ஆசிரியர் உட்பட பலரும் பாராட்டினர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.