கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் கோபியார் பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால். இவர் அங்குள்ள தனியார் தொழிற்சாலையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.
தற்போது இவர் வடலூர் அருகேயுள்ள பெத்தணாங்குப்பத்தில் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், இன்று வேணுகோபால் தனது இல்லத்திலிருந்து பெத்தணாங்குப்பம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
அப்போது இவர் சாலையின் இடது புறத்திலிருந்து வலது புறம் செல்வதற்கு திரும்பியதில், பின்புறமிருந்து வந்த தனியார் பேருந்து ஒன்று இவர் மீது மோதியதில், பேருந்தின் முன்பக்க சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வேணுகோபாலின் உடலை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.