1.11 லட்சம் சைபர் கிரைம் வழக்கில் ரூ.188 கோடி மீட்பு: மத்திய அமைச்சர் தகவல்

புதுடெல்லி: மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பாஜக எம்.பி.க்கள் தேஜஸ்வி சூர்யா, பிரதாப் சிம்ஹா ஆகியோர் சைபர் கிரைம் தொடர்பாக கேள்விகள் எழுப்பினர்.

அதற்கு மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: டிசம்பர் 12, 2022 வரை, குடிமக்கள் நிதி சைபர் மோசடி புகார் மற்றும் மேலாண்மை அமைப்பின் (சிஎப்சிஎப்ஆர்எம்எஸ்) கீழ் இதுவரை 6 லட்சத்துக்கும் அதிகமான புகார்கள் வந்துள்ளன. இதில் 1.11 லட்சம் வழக்குகளில் விசாரணை நடத்தப்பட்டு ரூ.188 கோடி மீட்கப்பட்டுள்ளது.

இந்த சிஎப்சிஎப்ஆர்எம்எஸ் முறையில் 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் சைபர் வழக்குகளை பொதுமக்கள் பதிவு செய்யலாம். கடந்த ஏப்ரலில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

மாநில போலீஸ் படைகளை ரூ.2,971.51 கோடி செலவில் நவீனப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான தொகை ஒதுக்கப்பட்டு பயிற்சிக் கருவிகள், சைபர் போலீஸ் கருவிகள், ஆயுதங்கள், நவீன ரக முன்னேறிய தொலைத்தொடர்பு சாதனங்கள், தடயவியல் கருவிகள் ஆகியவை வாங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.