பள்ளிகளில் கடந்த 16 ஆம் தேதி அரையாண்டு தேர்வுகள் தொடங்கி இன்றுடன் தேர்வு முடிகிறது. இந்நிலையில், டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 1 வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையுடன் கூடிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அடுத்த ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதிக்கு மீண்டும் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன.
இந்த நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சனி, ஞாயிறு நீங்கலாக மற்ற நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்த தனியார் பள்ளிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியது. இதனால் அந்தந்த மாவட்ட கல்வித்துறை ஆணையர்கள் சம்மந்தப்பட்ட பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இருப்பினும், சில பள்ளிகளில் அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்துவதில் உறுதியாக இருப்பதாக ஆசிரியர் சங்க அமைப்பு மற்றும் பெற்றோர் தரப்பில் இருந்தும் தொடர் புகார்கள் வந்தன.
இது பள்ளிக்கல்வித்துறை கவனத்துக்கு சென்ற நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளிகளுக்கும் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை. டிசம்பர் 24 முதல் ஜனவரி 1 வரை எந்த வகுப்புகளுக்கும் சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என்றும் மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.