இந்திய ஒற்றுமை பயணம்: ராகுல் காந்தியுடன் கைகோர்த்த கனிமொழி

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்தி வரும் இந்திய ஒற்றுமைப் பயணத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டார்.

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில், மத்தியில் ஆளும் பாஜக அரசை வீழ்த்தும் நோக்கிலும், காங்கிரஸ் கட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கிலும், செல்வாக்கை இழந்த காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் ஆதரவை கூட்டவும், அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், சோனியா காந்தியின் மகனுமான ராகுல் காந்தி, பாரத் ஜோடோ என்ற பெயரில் இந்திய ஒற்றுமைப் பயணத்தை நடத்தி வருகிறார்.

இந்த ஒற்றுமைப் பயணம், கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரியில் தொடங்கப்பட்டது. இதை திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களை கடந்து தற்போது பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் இந்திய ஒற்றுமைப் பயணத்தை ராகுல் காந்தி தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில், 100 நாட்களைக் கடந்து 107 ஆவது நாளை எட்டிய ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இன்று திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டார். 107 ஆவது நாளின் நடைபயணத்தை ஹரியானா மாநிலம் சோனா அருகே தௌஜ் என்கிற இடத்தில் ராகுல் காந்தியுடன், கனிமொழி கலந்து கொண்டார். அப்போது, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியும் உடனிருந்தார்.

இது குறித்து சமூக வலைதளமான ட்விட்டரில், கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்து உள்ளதாவது:

இன்று ஹரியானாவில் இந்திய ஒற்றுமை பயணத்தில் கலந்து கொண்டேன். இந்தியாவின் பன்மைத்துவத்தை உணர்ந்து அதனை ஒருங்கிணைக்கும் நோக்குடன் நடைபோடும் ராகுல் காந்தியுடன் இந்தப் பயணத்தில் நடந்ததில் மகிழ்ச்சி.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.