அண்ணாமலையார் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், 3 மணி நேரத்துக்கும் மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு பிறகு பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்து வருகிறது.  குறிப்பாக, அரசு விடுமுறை நாட்களிலும், வார இறுதி நாட்களிலும் வெளி மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநில பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.

தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறை தொடங்கியிருப்பதாலும், தொடர் விடுமுறை அமைந்திருப்பதாலும் நேற்று அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் பன்மடங்கு அதிகரித்து காணப்பட்டது. அதோடு, சபரி மலை செல்லும் பக்தர்கள், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு செல்லும் வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்கள், திருவண்ணாமலை வழியாக செல்வதால், அண்ணாமலையார் கோயிலை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

எனவே, செவ்வாடை பக்தர்கள், சபரிமலை பக்தர்கள் கூட்டமும் கோயிலில் அலைமோதுகிறது. அதிகாலையில் இருந்தே தரிசன வரிசையில் பக்தர்கள் சுமார் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை வரிசையில் காத்திருந்து  தரிசனம் செய்தனர். அதேபோல், கட்டண தரிசன வரிசையிலும் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் வருகை அதிகரித்ததால், சிறப்பு தரிசனம், அமர்வு தரிசனம் ரத்துச் செய்யப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.