திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சிவந்திபட்டியை சேர்ந்தவர் மகேந்திரன் – கணபதியம்மாள் தம்பதியினர். இவர்களுடைய மகன் செல்வக்குமார். இவருக்கும், தாழையூத்தை அடுத்துள்ள சங்கர் நகரை சேர்ந்த புவனேஷ்வரி என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைப்பெற்றது.
திருமணம் முடிந்ததில் இருந்தே செல்வகுமார் குடும்பத்தினர் புவனேஷ்வரியிடம் செல்வக்குமாருக்கு அரசு வேலை வாங்குவதற்கு பணம் தேவைப்படுவதாகவும், அதற்கு ரூ.10 லட்சத்தை வாங்கி வருமாறும் வற்புறுத்தி வந்துள்ளனர்.
இது குறித்து நிறைய பிரச்சனைகள் ஏற்பட்டதனால், திருமணம் முடிந்த இரண்டே மாதத்தில் புவனேஷ்வரி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். தொடர்ந்து அவர்களுக்குள் பிரச்னை நடைபெற்று வந்த நிலையில், கடந்த மாதம் செல்வக்குமார் வேறு ஒரு பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.
இதையறிந்த புவனேஷ்வரி, அவரது வீட்டுக்கு சென்று நியாயத்தைக் கேட்ட போது செல்வக்குமாரும், அவரது பெற்றோரும் சேர்ந்து புவனேஷ்வரியை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து, புவனேஸ்வரி நெல்லை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் தலைமை காவலர் ராதா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு செல்வக்குமார் மற்றும் அவரது பெற்றோர் மகேந்திரன்-கணபதியம்மாள் உள்ளிட்ட மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.