தமிழ்நாட்டுக்கு நலம் சேர்க்கும் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றவேண்டும்: தி.க.தலைவர் கி.வீரமணி கோரிக்கை..!!

திண்டுக்கல்: ராமர் பாலம் இருந்ததற்கான வரலாற்று ஆதாரம் இல்லையென்று ஒன்றிய அமைச்சரே தெரிவித்த நிலையில் தமிழ்நாட்டுக்கு நலம் சேர்க்கும் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றவேண்டும் என்று திராவிட கழக தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். தந்தை பெரியாரின் 49 வது நினைவு நாளை முன்னிட்டு திண்டுக்கல்லில் பெரியார் சிலைக்கு கி.வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் மதவெறி, சாதிவெறி, பதவிவெறி போன்றவற்றை தீர்க்க கூடிய பேராயுதமாக, இளைஞர்களின் கைகளில் பெரியார் இருப்பதாக கூறினார்.

ராமர் பலம் குறித்த கேள்விக்கு பதிலளித்த கி.வீரமணி ராமர் பாலம் இருந்ததற்கான ஆதாரம் இல்லையென்று ஒன்றிய அமைச்சரே தெரிவித்துவிட்டதை சுட்டிக்காட்டினார். எனவே சேது சமுத்திர கால்வாய்திட்டதை ஒன்றிய அரசு விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். தென்மாவட்ட மக்களுக்கு பயன்படக்கூடிய மிக பெரிய திட்டமான சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த தமிழ் நாட்டில் உள்ள அனைத்துக்கட்சிகளும் ஓர் அணியில் திரளவேண்டும் என்றும் வீரமணி கேட்டுக்கொண்டார். சேது சமுத்திர கால்வாய்திட்டதை உடனடியாக தொடங்க வலியுறுத்தி திராவிட கழகம் போராட்டங்களை முன்னெடுக்க இருப்பதாகவும் கி.வீரமணி கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.