திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்திய நபரை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
வெளிநாடுகளில் இருந்து தங்கம், போதை பொருட்கள் கடத்தி வரப்படுவதை தடுப்பதற்காக அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை சிங்கப்பூரிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
இதில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு பயணியின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் பால் பவுடர் டப்பாவில் மறைத்து வைத்து கடத்திவரப்பட்ட பிஸ்கட் வடிவிலான இரண்டு தங்கக் கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவரிடம் இருந்த ரூபாய் 8 லட்சம் மதிப்பிலான 147 கிராம் எடை கொண்ட தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்நபரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்நபரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.