தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நகைச்சுவை நடிகர் வடிவேலு சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்குப் பிறகு கோயிலை விட்டு வெளியே வந்த அவருடன் பக்தர்கள் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தில் எத்தனையோ கோயில்கள் இருந்தாலும், திருச்செந்தூர் முருகன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. என்ன மனக் குறைகள் இருந்தாலும் திருச்செந்தூர் முருகன் சந்நிதிக்கு வந்து வேண்டிக் கொண்டால் மனக்குறைகள் நீங்கிவிடும்.

என் வாழ்வில் முருகன் அருளால் பல அற்புதங்கள், மாற்றங்கள், முன்னேற்றங்கள் நடந்திருக்கு. ’வாரிசு’, ’துணிவு’ ஆகிய இரண்டு படங்கள் மட்டுமல்ல, திரைக்கு வரும் எல்லா படங்களும் பெரிய வெற்றி பெற வேண்டும். நான் எந்த கட்சியிலும் இல்லை, எந்த கூட்டணியிலும் இல்லை. என்னோட கூட்டணி காமெடி நடிகர்களுடன் மட்டும்தான். காமெடி நடிகர்கள் வந்தால் இணைந்து நடிக்க வேண்டியதுதான்.
தற்போது மாமன்னன், சந்திரமுகி 2, விஜய் சேதுபதியின் புதிய படம் என பல படங்களில் நடித்து வருகிறேன். ’மாமன்னன்’ திரைப்படம், அருமையான கதை அம்சமுள்ள படம். மிகப்பெரிய வெற்றி பெறும் என நம்புகிறேன். ’நாய் சேகர் ரிட்டன்’ திரைப்படம் வெற்றிகரமாக 3-வது வாரம் ஓடிக் கொண்டிருக்கிறது. குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம்.

பலரும் பார்த்துவிட்டு நன்றாக இருப்பதாக போன் செய்து வாழ்த்து சொல்லி வருகிறார்கள். ’நாய் சேகர் ரிட்டன்’ பட வெற்றியால், அதன் தயாரிப்பாளர் மகிழ்ச்சியாக இருக்கிறார். நான் மீண்டும் திரைக்கு வந்தது எனக்கும் மகிழ்ச்சி, மக்களுக்கும் மகிழ்ச்சி. அனைத்தும் கடவுளின் ஆசிர்வாதம்தான்” என்றார்.