காத்மாண்டு:’சீரியல் கில்லர்’ எனப் படும், தொடர் கொலையாளி சார்லஸ் சோப்ராஜ், நேபாள நாட்டு சிறையில் இருந்து, நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
இந்தியாவை சேர்ந்த ஆணுக்கும், கிழக்காசிய நாடான வியட்நாமைச் சேர்ந்த பெண்ணுக்கும் 1944ல் பிறந்தவர் சார்லஸ் சோப்ராஜ். இவருடைய தந்தையும், தாயும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து, சோப்ராஜ் பிறந்த சில வருடங்களில் பிரிந்து விட்டனர்.
பின், சோப்ராஜின் தாய் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மற்றொருவரை திருமணம் செய்து கொண்டார். பெற்றோர் கட்டுப்பாடு இன்றி வளர்ந்த சோப்ராஜ், 20க்கும் மேற்பட்ட இளம்பெண்களை கொலை செய்துள்ளார்.
இந்தியா உட்பட பல நாடுகளின் சிறைகளில் அடைக்கப்பட்ட சோப்ராஜ், நேபாளத்தில் 1975ல் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண்ணை கொலை செய்த வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு, அந்நாட்டின் காத்மாண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது 78 வயதாகும் சோப்ராஜ், முதுமை மற்றும் நன்னடத்தை காரணமாக தன்னை விடுதலை செய்ய வேண்டும் என நேபாள நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சோப்ராஜை விடுதலை செய்து, 15 நாட்களுக்குள் பிரான்சுக்கு நாடு கடத்த உத்தரவிட்டனர்.
இதையடுத்து, காத்மாண்டு சிறையில் இருந்து நேற்று காலை விடுதலை செய்யப்பட்ட சார்லஸ் சோப்ராஜ், இரவே பிரான்சுக்கு நாடு கடத்தப்பட்டார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement