தமிழகத்தின் பாரம்பரிய மற்றும் பழமையான நகரங்களில் ஒன்று திருச்சி மாநகர். சங்க காலங்களில் இருந்தே புகழ்பெற்ற நகரமாகவும், ஒரு காலத்தில் சோழர்களின் முக்கிய நகரமாக விளங்கிய திருச்சி இன்று போதைகளின் தலைநகரமாக இருப்பது தான் வேதனையளிக்கிறது.
சமீப காலமாகவே போதை மருந்துகளின் கூடாரமாக திருச்சி உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே இங்கு கஞ்சா விற்பனை தொடர்பாக பல நபர்கள் கைது செய்யப்பட்டு இருந்தாலும் தற்போது ‘லைசர்கிஸ் ஆசிட் டைத்லாமைடு’ என்ற போதைப் பொருளின் பயன்பாடு மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் அதிகரித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த லைசர்கிஸ் ஆசிட் டைத்லாமைடு ( LSD), ஒரு வாசமற்ற, நிறமற்ற மற்றும் சுவையற்ற வேதிப்பொருளாகும். இதனை பிற பொருள்களுடன் கலந்து விற்பனை செய்யும் போது இதை எளிதில் கண்டுபிடிக்க இயலாது.
இந்த லைசர்கிஸ் ஆசிட் டைத்லாமைடு வேதிப்பொருட்களை வெளியூர்களில் இருந்து மாத்திரை வடிவில் ஆர்டர் செய்து அவற்றை சாக்லேட்டுகள் போல் தயாரித்து பள்ளி மாணவர்களிடமும் கல்லூரி மாணவர்களிடமும் விற்பனை செய்வதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து காவல்துறை தனிப்படை அமைத்து விசாரித்ததில் திருச்சி வெனிஸ் தெருவை சார்ந்த, ஹரிஹரன் என்ற 23 வயதை இளைஞரை கைது செய்துள்ளது. இவரிடம் விசாரிப்பதில் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகி உள்ளன .
இது பற்றி வாக்குமூலம் அளித்துள்ள ஹரிஹரன் இந்த போதை மூலக்கூறை வெளியூரில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் இறக்குமதி செய்து அவற்றை பள்ளி மாணவர்களுக்கும் கல்லூரி மாணவர்களுக்கும் விற்பனை செய்ததாக ஒத்துக் கொண்டுள்ளார் .
இவர் மீது (NDPS) சட்டம், 1985 மற்றும் சிறார் நீதி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இது போன்ற போதை பொருள்களானவை சிறுவர்கள் மற்றும் மாணவர்களின் உடல் நிலையை பாதிப்பதோடு அவர்களுக்கு மனதளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி அதனைத் தொடர்ந்து தீயச் செயல்களை செய்வதற்கு தூண்டுகின்றன. இதனால் பெற்றோர்கள் விழிப்புடன் இருந்து தங்கள் குழந்தைகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பது அவசியமாகிறது.