ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை கடற்கரையில் இருந்து இலங்கைக்கும், இலங்கையிலிருந்து வேதாளை, மரைக்காயர்பட்டனம் கிராமத்திற்கும் கோடிக்கணக்கான போதைப்பொருள் உள்ளிட்டவை கடத்திச் செல்லப்பட்டு வருகின்றன என்ற குற்றச்சாட்டு உள்ளது.
கடந்த வாரம் இலங்கைக்கு கடத்துவதற்காக காரில் கொண்டுவந்த பல கோடி மதிப்புள்ள 80 கிலோ மெத்தாபெட்டமைன் போதைப் பொருளை புலனாய் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்து கைப்பற்றினர். இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மண்டபத்தை அடுத்துள்ள வேதாளை கடற்கரை வழியாக இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. அதேபோல் கடந்த மாதம் தி.மு.க கவுன்சிலர்களால் கடத்தப்பட இருந்ந மர்ம பவுடரும் இதே வேதாளை கிராமத்தின் வழியாக கடத்த இருந்தது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி இலங்கையில் இருந்து மரக்காயர்பட்டினம் கடற்கரை வழியாக கடத்தி கொண்டுவரப்பட்ட தங்கத்தை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர்.

மேலும் கேரளாவில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்படும் கஞ்சா மூட்டைகள், டன் கணக்கில் மஞ்சள், பல கோடி ரூபாய் மதிப்புள்ள கடல் அட்டைகள், பெயின்ட், வார்னிஷ், நெயில் பாலிஷ், பீடிஇலைகள் என கடத்தல் பொருள்களின் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
கடத்தல்காரர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கடத்தல் பொருள்கள் அனைத்தும் வேதாளை கடற்கரை வழியாகவே இலங்கைக்கு கடத்திச் செல்ல இருந்ததாக தெரிவித்துள்ளனர். இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தின் கடத்தல் மையமாக வேதாளை கிராமம் மாறி வருவதை தொடர்ந்து போலீஸார் மற்றும் புலனாய்வு குழுவினர் வேதாளை கிராமத்தின் பக்கம் தங்களுடைய பார்வையை திருப்பி ராமநாதபுரம் வேதாளை கடலோரப் பகுதியை தீவிரமாக கண்காணிக்க தொடங்கியுள்ளனர்.

அதன்படி மத்திய அதிவிரைவு படை போலீஸார் வேதாளை கிராமம் மற்றும் வேதாளை கடற்கரை கிராமத்தின் தெரு தெருவாக துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் கொடி அணிவகுப்பு நடத்தினர். அவர்களுடன் தமிழக போலீஸாரும் இணைந்து கொடிஅணிவகுப்பில் ஈடுபட்டனர்.
“வேதாளை கடற்பகுதியை சுற்றி சிறப்பு சோதனை சாவடி அமைக்கப்பட உள்ளதாகவும், இந்த சோதனை சாவடியில் தமிழக போலீஸார், கடலோர பாதுகாப்பு குழும போலீஸார், மற்றும் வனத்துறை அதிகாரிகள் பணியமர்த்த உள்ளதாக ராமேஸ்வரம் துணை போலீஸ் சூப்பிரண்ட் தனஜெயன் தெரிவித்தார்.