இந்தியாவுக்கு எதிராக போர் நடந்தால் சீனாவும், பாகிஸ்தானும் சேர்ந்து தாக்குதல் நடத்தும்: ராகுல் எச்சரிக்கை

புதுடெல்லி: ‘இந்தியாவுக்கு எதிராக சீனாவும், பாகிஸ்தானும் போருக்கு தயாராகி வருகின்றன. அவ்வாறு போர் நடந்தால் இரு நாடுகளும் இணைந்து தாக்குதல் நடத்தும்’ என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்திய ஒற்றுமை பயணத்தின் போது, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை சந்தித்து பேசிய நிகழ்வை ராகுல் காந்தி தனது யூடியூப் சேனலில் நேற்று வெளியிட்டுள்ளார்.

அதில் ராகுல் பேசியிருப்பதாவது:
இந்தியா இப்போது மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளது. நம் ராணுவத்தின் மீது எனக்கு மரியாதை மட்டும் இல்லை, மிகுந்த அன்பும் பாசமும் உண்டு. நீங்கள் இந்த தேசத்தை பாதுகாக்கிறீர்கள். நீங்கள் இல்லாமல் இந்த தேசம் இல்லை. முன்பு, நமக்கு 2 எதிரிகள் இருந்தனர். ஒன்று, சீனா, இன்னொன்று பாகிஸ்தான். அந்த எதிரிகளை தனித்தனியாக வைத்திருப்பது நமது கொள்கையாக இருந்தது. ஆனால் இன்று நிலைமை மாறி விட்டது. சீனாவும், பாகிஸ்தானும் ராணுவ ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாக ஒன்றாக செயல்படுகின்றன.

இரு நாடுகளும் போருக்கு தயாராகி வருகின்றன. ஒருவேளை இந்தியாவுக்கு எதிராக போர் நடந்தால், அதில் சீனாவும், பாகிஸ்தானும் தனித்தனியாக இல்லாமல், சேர்ந்து நம்மை தாக்கும். அதனால்தான் ஒன்றிய அரசு அமைதியாக இருக்க முடியாது என மீண்டும் மீண்டும் நான் சொல்கிறேன். கடந்த 9ம் தேதி அருணாச்சல பிரதேச எல்லையில் என்ன நடந்தது என்பதை ஒன்றிய அரசு முழுமையாக சொல்ல வேண்டும். உண்மையிலேயே இந்த விஷயத்தில் நாம் 5 ஆண்டுக்கு முன்பே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

அதை ஒன்றிய பாஜ அரசு செய்யத் தவறி விட்டது. நாம் வேகமாக செயல்படாவிட்டால், பெரிய இழப்பு ஏற்படும். அருணாச்சல் மற்றும் லடாக் எல்லையில் என்ன நடக்கிறது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளேன். இவ்வாறு ராகுல் பேசியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.